வகுப்புவாதத்திற்கு ஐதராபாத் இரையாகக் கூடாது.. பாஜக எம்எல்ஏவை சிறையிலடைக்க வேண்டும் -ஒவைசி வேண்டுகோள்
ஐதராபாத்: நுபுர் ஷர்மா பானியில் நபிகள் நாயகம் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக கைதான தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கை கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சஸ்பெண்ட் செய்து இருக்கிறது.
பிரபல ஸ்டான்ட் அப் காமெடியனாக இருந்த முனவர் ஃபரூக்கி, இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐதராபாத்தில் நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனை அடுத்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வந்து இந்துத்துவாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 2,000 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் முனவர் ஃபரூக்கி அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
அவுரங்கசீப்பை வணங்கும் கெஜ்ரிவால், சிசோடியா.. ராணா பிரதாப் சிங் பேரை சொல்வதா? பாஜக பாய்ச்சல்
பாஜக எம்.எல்.ஏ.
இந்த நிலையில் கோஷாமால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங், முனவர் ஃபரூக்கி மற்றும் அவரது தாயாரை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். 10 நிமிடங்கள் 27 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைபோல் நபிகள் நாயகம் குறித்து ராஜா சிங் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. வீடியோவின் முடிவில் நான் பேசிய அனைத்தும் நகைச்சுவை என்று அவர் கூறி இருக்கிறார்.
கைது
இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் நேற்றிரவு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராஜா சிங் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்த ஐதராபாத் போலீஸ் தற்போது அவரை கைது செய்து இருக்கிறது.
கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
இந்த நிலையில் ராஜா சிங்கை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக அறிவித்து இருக்கிறது. பாஜகவின் கட்சி விதிகளை மீறி ராஜா சிங் பேசி இருப்பதாகவும், அவரிடம் கட்சித் தலைமை மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சியின் ஒழுங்கு கமிட்டியின் செயலாளர் ஓம் பதக் தெரிவித்து இருக்கிறார். மேலும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் ராஜா சிங் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
ஜாமீனில் விடுவிப்பு
இந்த நிலையில் ராஜா சிங் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதனால் கொந்தளித்த பல்வேறு அமைப்பினர் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஐதராபாத் காவல்துறை தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 90 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
ஒவைசி கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐதராபாத் எம்.பி அசதுத்தீன் ஒவைசி, "ராஜா சிங்கின் வெறுப்பு பேச்சால் ஏற்பட்ட விளைவு இது. அவரை சிறைக்கு சீக்கிரம் அனுப்ப வேண்டும். அனைவரும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். போலீசார் தேவையின்றி வீடு புகுந்து 5 பேரை கைது செய்துள்ளார்கள். கைதானவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஐதராபாத் நமது வீடு. அது வகுப்புவாதத்திற்கு இரையாகிவிடக்கூடாது." என்றார்.