நடு ரோட்டில் வைத்து... சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட வக்கீல் தம்பதி... தெலங்கானாவில் பரபரப்பு
ஹைதரபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வக்கீல் தம்பதி நடு ரோட்டில் வைத்து, சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ள பிரபல வழக்கறிஞர் காட்டு வாமன் ராவ். அவரது மனைவி பி.வி.நாகமணி. இவரும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தனர்.
இன்று மதியம் இந்த தம்பதி நீதிமன்றத்திலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தது. மந்தானி மற்றும் பெடப்பள்ளி நகரங்களுக்கு இடையே காரை வழிமறித்த மர்ம கும்பல், திடீரென்று அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வக்கீல் தம்பதியைத் தாக்கத் தொடங்கினர்.
கொடூர தாக்குதல்
இந்தத் தாக்குதலை அங்குச் சென்று கொண்டிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இருப்பினும், அந்த கும்பல் விடாமல் அந்த வக்கீல் தம்பதியை தாக்கியது. தப்பித்து ஓட முயன்ற வாமன் ராவை அந்தக் கும்பல் விரட்டி சென்று, சரமாரியாக வெட்டும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. மற்றொரு வீடியோவில், படுகாயமடைந்த நாகமணி, அசையாமல் காரின் இருக்கைக்கு இடையில் சிக்கியிருக்கிறார்.
இருவரும் உயிரிழந்தனர்
படுகாயம் அடைந்த இருவரும் அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர், வக்கீல்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்தக் கொடூர தாக்குதலுக்கு தெலுங்கானா பார் அசோசியேஷன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் வருமானம் இன்றி தவித்த வழக்கறிஞர்களின் நலனிற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்த தம்பதி எடுத்திருந்தனர்.
பரவும் வீடியோ
இணையத்தில் மற்றொரு ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருக்கும் வாமன் ராவ், தன் மீது தாக்குதல் நடத்தியவர் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் குந்தா சீனிவாஸ் தான் என்று குற்றஞ்சாட்டுகிறார். இந்த தம்பதியினர் ஏற்கனவே தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனிப்படைகள் அமைப்பு
நடுரோட்டில் வைத்து வக்கீல் தம்பதி கொல்லப்பட்ட சம்பவம் தெலங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் கமிஷனர் சத்தியநாராயணா கூறுகையில், "இந்தத் தாக்குதல் நடைபெற 30 நிமிடங்களுக்கு முன் தான் வாமன் ராவ்வின் தந்தை காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பார்க்க தொழில்முறை ரவுடிகளை போலவே உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 10 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்" என்றார்