சரக்குடன் “சைட்டிஷ்” ஆக உயிர் கோழி! தெலங்கானாவில் ஆளும் கட்சி அட்ராசிட்டி! ‛க்யூ’வில் மதுபிரியர்கள்
ஐதராபாத்: தேசிய அரசியலில் பாஜகவை எதிர்க்கும் வகையில் தெலங்கான முதல்வர் சந்திரசேகரராவ் நாளை புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார். இதையொட்டி தெலங்கானாவில் உள்ள கட்சி தலைவர்கள் குவாட்டரும் அதற்கு சைட்டிஷ்ஷாக உயிருடன் கோழியும் வழங்கி அட்ராசிட்டி செய்தனர். .
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக சந்திர சேகரராவ் உள்ளார்.
தெலங்கானா புதிய மாநிலமாக உருவானபோது தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தே செயல்பட்டு வந்தது. அதன்பிறகு இருகட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

3வது அணி அமைக்க திட்டம்
சமீப காலமாக மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திர சேகரராவ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் இந்த ஆண்டில் தெலங்கானா சென்ற பிரதமர் மோடியை அவர் சந்திக்காமல் தவிர்த்தார். அதோடு சந்திரசேகரராவ் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பணியை அவர் தொடங்கி உள்ளார். பாஜக, காங்கிரஸ் இன்றி 3வது அணி அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார். அதன்படி சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே, பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பீகார் முதல் அமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கர்நாடகை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அவரது மகனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி சந்தித்து பேசினார். மேலும் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சி தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார். வரும் நாட்களில் இவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

இன்று புதிய கட்சி அறிவிப்பு
இதற்கு மத்தியில் தான் தேசிய அரசியலில் கவனம் செலுத்த சந்திர சேகரராவ் புதிய கட்சியை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான அறிவிப்பானது தசரா தினமான நாளை வெளியாக உள்ளது. இந்த கட்சியின் பெயர் என்பது ‛பாரத் ராஷ்ட்ர சமீதி' அல்லது பாரதிய ராஷ்ட்ர சமீதி (Bharat அல்லது Bharathiya Rashtra Samithi சுருக்கமாக பிஆர்எஸ் BRS) என இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் சந்திர சேகரராவ் தேசிய அரசிலிலும் அவரது மகன் மாநில அரசியலிலும் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

குவாட்டருடன் உயிருள்ள கோழி
இந்நிலையில் தான் சந்திர சேகரராவ் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிட உள்ள நிலையில் தெலங்கானாவில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அதன்படி தெலங்கானா மாநிலம் வாரங்காலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சி தலைவரான ராஜநாள ஸ்ரீஹரி என்பவர் இன்று தொண்டர்களுக்கு குவாட்டரும், உயிருள்ள கோழியும் வழங்கினார். இந்த தகவலை அறிந்த மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குவாட்டரையும், உயிருள்ள கோழியையும் வாங்கி சென்றனர். இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications