‛டார்கெட்டில் தமிழகம்’.. பவன் கல்யாணுக்கு, மோடி தரும் முக்கிய பொறுப்பு.. 2ல் ஒன்றை தொட உத்தரவு
ஹைதராபாத்: பாஜக கூட்டணியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளார். தற்போது அவர் ஆந்திர துணை முதல்வராக செயல்பட்டு வரும் நிலையில் அவருக்கு முக்கிய பதவியை கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். அதன்படி அவரை மத்திய அமைச்சராக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மோடியின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார். இவர் இந்து மதத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். நடிகர் பவன் கல்யாணுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.
அதேபோல் இந்தியாவில் எங்கு சென்றாலும் கூட பவன் கல்யாண் எளிதில் அடையாளம் காணப்படும் நபராக உள்ளார். பவன் கல்யாணின் இந்த செல்வாக்கை பயன்படுத்தி கொள்ள பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அதன்படி ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறபப்டுகிறது. அதன்படி பிரதமர் மோடியின் மனதில் பவன் கல்யாணுக்கு 2 பொறுப்புகள் உள்ளன.
ஒன்று பவன் கல்யாணை மத்திய அமைச்சராக்கி தேசிய அரசியலுக்கு இழுப்பது. அதாவது அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. தற்போதைய மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். ஜனசேனா கட்சிக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு இல்லை.
இதனால் பிரதமர் மோடி, பவன் கல்யாணை மத்திய அமைச்சராக்க திட்டமிட்டுள்ளதோடு, அவருக்கு முக்கிய இலாகாவை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பவன் கல்யாண் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவரது சகோதரர் நாகபாபுவுக்கு ஆந்திரா அமைச்சரவையில் என்ட்ரி கொடுக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஒருவேளை இந்த முடிவுக்கு பவன் கல்யாண் ஒப்புக்கொள்ளாமல் ஆந்திரா அரசியலிலேயே இருக்க விரும்பும்பட்சத்தில் இன்னொரு பொறுப்பு வழங்க முடிவு செய்துள்ளார். அதன்படி பிரதமர் மோடியின் தேர்தல் மையக்குழுவில் அவரை உறுப்பினராக்க திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் பிரதமர் மோடிக்கும் அவருக்குமான தொடர்பு நன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்டசபை தேர்தல்களில் பவன் கல்யாணை பிரசாரத்துக்கு பயன்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி நம்புகிறார்.
குறிப்பாக அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பவன் கல்யாண் சமீபகாலமாக தமிழ்நாடு சார்ந்த விஷயங்களை பேசி வருகிறார். இதனால் தமிழ்நாடு சட்டசபை தேர்தலிலும் பவன் கல்யாணை பயன்படுத்தி கொள்ளலாம் என்று பிரதமர் மோடி கணக்குபோடுகிறார்.
அதுமட்டுமின்றி ஆந்திராவிலும் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி நம்புகிறார். அதாவது இப்போது பாஜக, தெலுங்கு தேசம் + ஜனசேனா கூட்டணியில் உள்ளது. ஆனால் இந்த கூட்டணி எவ்வளவு காலம் இருக்கும் என்பது கேள்விக்குறி தான். தெலுங்கு தேசம் கட்சி கைவிட்டால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும். இதனால் ஆந்திராவில் பாஜகவை வளர்ப்பது முக்கியம். இதனை பவன் கல்யாணுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பாஜக தலைவர்கள் மூலம் நிறைவேற்ற முடியும் என்று மோடி நம்புகிறார்.
இந்த 2 பொறுப்புகள் குறித்து பிரதமர் மோடி சார்பில் பவன் கல்யாணுக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் வாரங்களில் அதற்கு பவன் கல்யாண் பதிலளிக்க உள்ளார். பவன் கல்யாணின் நிலைப்பாட்டை பொறுத்து பிரதமர் மோடியின் மூவ் இருக்கும். இதனால் விரைவில் பிரதமர் மோடி, பவன் கல்யாணுக்கு இந்த 2 பொறுப்பில் ஒன்றை வழங்குவார்கள் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications