உச்சக்கட்ட மோதல்.. தெலங்கானாவில் பாஜக எம்பி வீட்டை நொறுக்கிய டிஆர்எஸ் கட்சியினர்.. ஒரே பதற்றம்
ஐதராபாத்: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடன் பேசியதாக கூறிய பாஜக எம்பி தர்மாபுரி அரவிந்த் வீட்டுக்குள் நுழைந்து தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
தெலங்கானா முதலமைச்சராக இருப்பவர் சந்திரசேகர ராவ். ஒரு காலத்தில் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்)கட்சியும், பாஜகவும் ஒன்றாக கூட்டணியில் இருந்தன.
தற்போது இரு கட்சிகள் இடையே மோதல் போக்கு உள்ளது. சந்திரசேகரராவ் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
'சந்திரசேகர ராவ் அரசாங்கம் வெண்டிலேட்டரில் உள்ளது'.. 'விரைவில் கவிழ்ந்துவிடும்'.. பாஜக மாநில தலைவர்
தெலங்கானா அரசியல் களம்
அதோடு தெலங்கானா வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்காமல் சந்திரசேகர ராவ் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவுக்கு போட்டியாக சந்திரசேகர ராவ் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை துவங்கி உள்ளார். தெலங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சந்திர சேகர ராவ் மற்றும் பாஜகவினர் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு சந்திரசேகரராவ் கட்சியின் எம்எல்ஏக்களை கட்சி தாவ வைப்பதாக ஆடியோ, வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
பாஜக எம்பி கருத்து
இந்நிலையில் தான் தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியின் பாஜக எம்பி அரவிந்த் தர்மபுரி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவுக்கு காங்கிரஸிடம் இருந்து வாய்ப்பு கிடைத்தது. காங்கிரஸில் இணையும்படி மல்லிகார்ஜூன கார்கே, கவிதாவிடம் தெரிவித்தார். கவிதாவை வாங்கி நாங்கள் என்ன செய்ய போகிறோம். கவிதாவை வாங்கி வர்த்தம் செய்யும் கட்சியாக பாஜகவை நடத்தவில்லை'' என தெரிவித்து இருந்தார்.
சூறையாடப்பட்ட வீடு
இது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பாஜக எம்பி தர்மபுரி அரவிந்த்தை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இந்நிலையில் தான் நேற்று அரவிந்த் தர்மபுரியின் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களை மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் பின்னணியில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளதாக அரவிந்த் தர்மபுரி குற்றம்சாட்டி உள்ளது.
பாஜக எம்பி கூறியது என்ன?
இதுபற்றி தர்மபுரி அரவிந்த ட்விட்டர் பக்கத்தில், ‛‛ தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த குண்டர்கள் வீட்டை அடித்து நொறுக்கிவிட்டனர். சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ் மற்றும் மகள் கவிதா உத்தரவில் இது நடந்துள்ளது. பொருட்களை அடித்து நொறுக்கியவர்கள் தாயை மிரட்டி உள்ளனர்'' என குற்றம்சாட்டி உள்ளார். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.
முதலமைச்சரின் மகள் எச்சரிக்கை
முன்னதாக பாஜக எம்பியின் குற்றச்சாட்டு பற்றி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா கூறுகையில், ‛‛என்னை பற்றி தவறான தகவல்கள் பரப்புவதை பாஜகவினர் நிறுத்த வேண்டும். என்னை பற்றி அவதூறு பரப்பினால் செருப்பால் அடிப்பேன்'' என ஆக்ரோஷமாக தெரிவித்தார். மேலும், ‛‛என்னை பாஜகவில் இணையும்படி சில நண்பர்கள் கூறினர். அவர்களின் பெயரை வெளியிட விரும்பவில்லை. பாஜகவில் இணைய கூறிய வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன்'' என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலங்கானாவில் பாஜக, டிஆர்எஸ் கட்சி தலைவர்கள் இடையேயான இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தான் பாஜக எம்பி தர்மபுரி அரவிந்த் வீடு சூறையாடப்பட்டு அரசியல் களத்தை இன்னும் கொஞ்சம் சூடாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.