"ஜாக்கிரதை".. மேடையில் மோடிக்கு கேசிஆர் எச்சரிக்கை.. தேசிய அரசியலில் குதிக்க ரெடி.. புது ட்விஸ்ட்!
ஹைதராபாத்: தேசிய அரசியலில் குதிக்க தயாராக இருப்பதாக தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்து வருகிறார். பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வை இல்லாதவர், பாஜகவை கடலில் வீச வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் சமீபத்தில் விமர்சனம் செய்தார்.
அதோடு தெலுங்கானா வந்த பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்பதை கூட தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் தவிர்த்தார். அந்த அளவிற்கு மோடி - கேசிஆர் இடையிலான மோதல் பெரிதாகி உள்ளது.
பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்க செல்லாதது ஏன்?.. மாநில அரசு விளக்கம்!
சந்திரசேகர ராவ்
இந்த நிலையில் தெலுங்கானாவில் இருக்கும் ஜன்கான் மாவட்டத்தில் பேசிய கே சந்திரசேகர ராவ் மோடியை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் தனது பேச்சில், மத்திய பாஜக அரசு எங்களுக்கு தேசிய நலத்திட்டங்கள் எதையும் வழங்குவது இல்லை. பட்ஜெட்டில் போதிய திட்டங்கள் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. எங்களுக்கு மருத்துவ கல்லூரிகள் அறிவிக்கப்படவில்லை. எங்களை தொடர்ந்து நீங்கள் புறக்கணித்து வருகிறீர்கள். நீங்கள் எங்களை ஆதரிக்கவில்லை என்றால் பிரச்சனை இல்லை.
துரத்தி அடிப்போம்
நாங்கள் உங்களை இந்த ஆட்சியில் இருந்து துரத்தி அடிப்போம். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. அதன்பின் எங்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு வரும் ஒரு அரசை நாங்கள் மத்தியில் ஆட்சியில் அமர்த்துவோம். டெல்லியை சிலர் கோட்டை போல நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவைப்பட்டால் தேசிய அரசியலில் நானும் முக்கிய பங்கு வகிப்பேன்.
ஜாக்கிரதை
தேவைப்படும் பட்சத்தில் தேசிய அரசியலில் நான் முக்கிய பங்கு வகிப்பேன். இந்த நாட்டிற்காக நாங்கள் போராடுவோம். நீங்கள் எனக்கு ஆதரவு தந்தால் டெல்லி கோட்டையை உடைக்க நாங்கள் தயார். நரேந்திர மோடி ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் மிரட்டல்களுக்கு யாரும் அஞ்ச மாட்டோம் என்று என்று சந்திரசேகர ராவ் மேடையில் மக்களுக்கு முன்னிலையில் பேசினார்.
மம்தா
மம்தா பானர்ஜி ஏற்கனவே தேசிய அரசியலில் குதித்துவிட்டார். அடுத்த லோக்சபா தேர்தலில் மம்தா பானர்ஜி தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்கி பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்க தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். மம்தாவிற்கு அடுத்தபடியாக கேசிஆர்தான் பிரதமர் மோடியை தொடர்ந்து எதிர்ப்பு வருகிறார்.
கேசிஆர் மம்தா கூட்டணி
இதனால் தேசிய அளவில் மம்தாவிற்கு கேசிஆர் ஆதரவு அளிக்க இருக்கிறாரோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மம்தாவின் பிரதமர் கனவிற்கு கேசிஆர் உறுதுணையாக இருப்பார் என்று ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழ தொடங்கி உள்ளது. ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் 2 மற்றும் 3ம் கட்ட சட்டசபை தேர்தலின் போது கேசிஆர் அகிலேஷுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது தேசிய அரசியலிலும் குதிக்க தயார் என்று கேசிஆர் அறிவித்துள்ளார்.