சந்திரசேகர ராவின் அடுத்த குறி தமிழகம்.. திறக்கப்படுகிறது பாரத் ராஷ்டிரிய சமிதி கிளை!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி என தேசிய கட்சியாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதன் கிளையை உருவாக்கும் முயற்சிகளில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் தவிர்த்து மாநில கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளையும் காங்கிரஸ் ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைத்தால்தான் சாத்தியம் என்பது பொதுவான கருத்து.

அதேநேரத்தில் காங்கிரஸ் அல்லாத அனைத்து மாநில கட்சிகளும் ஒருங்கிணைந்தாலே பாஜகவை எளிதாக வீழ்த்தலாம் என்பது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோரின் விருப்பம். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் இதேகருத்தை கொண்டிருப்பவர்.
தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ்தான் சந்திரசேக ராவுக்கு எதிர்க்கட்சி; அந்த இடத்தைப் பிடிக்க பாஜக முட்டி மோதுகிறது. ஆகையால் காங்கிரஸ், பாஜகவை எதிர்த்து அரசியல் செய்தாக வேண்டிய கட்டாயம் சந்திரசேகர ராவுக்கு இருக்கிறது. இதனடிப்படையில்தான் தேசிய அரசியலிலும் தமது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் அவர். திடீர் திடீரென பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்களை சந்திப்பது பின்னர் இடைவெளி கொடுப்பது என்பதும் சந்திரசேகர ராவின் பாணியாக இருக்கிறது.
இந்நிலையில்தான் தெலுங்கானா ராஷ்டிரிய சமித் என்ற தமது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றினார். டிஆர்எஸ்-க்கு பதில் பிஆர்எஸ் என மாற்றப்பட்ட இந்த கட்சி தேசியக் கட்சியாக வளர்த்தெடுக்கப்படும் என்பது சந்திரசேகராவின் நம்பிக்கை. டெல்லியில் பிஆர்எஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாஜக அல்லாத மாநில கட்சிகளின் தலைவர்களை சந்திரசேகர ராவ் அழைத்திருந்தார். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முந்தைய ஒரு வியூகமாகவும் இது பேசுபொருளானது.
தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கி உள்ளது. கர்நாடகாவில் உள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களின் வாக்குகளை குறிவைத்து அம்மாநில சட்டசபை தேர்தலில் பி.ஆர்.எஸ். போட்டியிடும் என சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். அத்துடன் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைப்பதாகவும் கூறியிருந்தார் சந்திரசேகர ராவ்.
இதனைத் தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாட்டிலும் பி.ஆர்.எஸ். கட்சியின் கிளைகளை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் சந்திரசேகர ராவ். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியின் சீனியர்களை, அதிருப்தியாளர்களை இழுத்து பிஆர்எஸ் கிளையை உருவாக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் சந்திரசேகர ராவ். ஆந்திராவில் தமது வியூகம் ஒர்க் அவுட் ஆகும் என நினைக்கிறாராம் சந்திரசேகர ராவ்.
அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் கால்பதிக்க விரும்புகிறாராம் சந்திரசேக ராவ். சென்னை உள்ளிட்ட வட தமிழக எல்லைகளில் தெலுங்கு மொழி பேசுகிற மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதுடன் ஆந்திராவுடன் கொள்வினை- கொடுப்பினை என உறவுகளாகவும் இருந்து வருகின்றனர். இந்த வாக்குகளுக்குதான் சந்திரசேகர ராவ் குறி வைத்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திராவிட, தமிழ்த் தேசிய கட்சிகளுக்குதான் இடம் இருந்து வருகிறது. இதர தேசிய அல்லது பிற மாநில கட்சிகள் லெட்டர் பேடு கட்சிகளாகத்தான் இங்கே செயல்பட்டு வருகின்றன என்பது கள யதார்த்தம்.












Click it and Unblock the Notifications