சந்திரசேகர் ராவை மீண்டும் முதல்வராக்க வேண்டும்- கடிதம் எழுதி தொண்டர் தற்கொலை
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர ராவை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு கட்சித் தொண்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கானாவில் அடுத்த மாதம் 7 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும் போராடி வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் வரும் வரை பொறுப்பு முதல்வராக இருக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டதால் சந்திரசேகர் ராவ் அப்பதவியில் தொடர்ந்து வருகிறார்.
நிஸாம்பேட்டையைச் சேர்ந்தவர் குருவப்பா (42). இவர் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தொண்டராவார். இவர் கடந்த சனிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அங்கு போலீஸார் நடத்திய சோதனையில் ஒரு கடிதம் சிக்கியது. அதில் தெலுங்கானா மக்கள் சந்திரசேகர் ராவை மீண்டும் முதல்வராக தேர்வு செய்ய வேண்டும். அது போல் எம்எல்ஏவாக விவேகானந்தாவையே மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.
இறந்த குருவப்பா, தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க கோரும் போராட்டத்தின் போது தற்கொலைக்கு முயற்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.