தெலுங்கு முன்னணி நடிகர், மாஜி இணை அமைச்சர்.. கிரிஷ்ணம் ராஜு (83) உடல்நலக்குறைவால் காலமானார்!
ஹைதராபாத்: தெலுங்கானாவை சேர்ந்த மூத்த நடிகரும், அரசியல்வாதியுமான கிரிஷ்ணம் ராஜு இன்று அதிகாலை காலமானார். வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை 3. 25 மணிக்கு காலமானார்.
83 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவரின் உடல்நிலை சமீபத்தில் மோசமானது. தீவிர சிகிச்சை பிரிவிற்கு இதையடுத்து மாற்றப்பட்ட அவர் இன்று அதிகாலை காலமானார்.

தெலுங்கு சினிமா உலகில் கிரிஷ்ணம் ராஜு "ரிபல் ஸ்டார்" என்று அழைக்கப்பட்டு வந்தார்.பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் நந்தி விருது உள்ளிட்ட முக்கிய விருதுகளை வாங்கி இருக்கிறார். கடைசியாக பிரபாஸ் நடித்த ராதே ஷியாம் படத்தில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த இவர் அதன்பின் உடல்நிலை மோசமானதாக நடிக்க முடியவில்லை.
ஓய்விற்கு பின் மீண்டும் சினிமாவிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று உடல்நிலை இவருக்கு மோசமானது. தெலுங்கு சினிமா உலகை சேர்ந்த பலர் இவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை ஹைதராபாத்தில் இவரின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா மட்டுமின்றி இவர் அரசியலிலும் தீவிரமாக இருந்தார். சிரஞ்சீவின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இவர் உறுப்பினராக இருந்தார். பாஜக, காங்கிரசில் இவர் உறுப்பினராக இருந்தார். அதேபோல் கோபி கிருஷ்ணா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
1992ல் முதல் முறை காங்கிரஸ் சார்பாக எம்எல்ஏ தேர்தலில் இவர் ஆந்திராவில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர் பாஜகவில் இணைந்து 1998ல் அக்கட்சிக்காக காக்கிநாடாவில் போட்டியிட்டு எம்பியாக வென்றார். இந்த தேர்தலில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, மாநிலத்திலேயே அப்போது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.
மத்திய அமைச்சரவையின் பல்வேறு கமிட்டிகளில் இவர் உறுப்பினராக இருந்துள்ளார். 1999ல் மீண்டும் பாஜக எம்பியாக இவர் லோக்சபா சென்றார். அதோடு பாஜகவின் கொறடாவாக இவர் நாடாளுமன்றத்தில் இருந்தார். இதன் பின் இவர் மத்திய இணை அமைச்சராக வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை கவனித்து வந்துள்ளார்.
இவரின் மரணம் அரசியலிலும், தெலுங்கு சினிமா உலகிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications