விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமல்ல.. சிலைகளை கரைப்பதற்கும் விடுமுறை.. தெலங்கானாவில் அறிவிப்பு!
ஹைதராபாத்: விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 31ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், விநாயகர் சிலைகளை கரைப்பதும் ஒரு பெரும் கொண்டாட்டமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறையளித்தது மட்டுமல்லாது, சிலை கரைப்பு அன்றும் விடுமுறையை அறிவித்துள்ளது தெலங்கானா அரசு.
இந்த அறிவிப்பையடுத்து மாநில மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த விழாவிற்கு அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மாவை சிறப்பு விருந்தினராக பாக்யநகர் கணேஷ் உத்சவ் சமிதி அழைத்திருக்கிறது.

நம்பிக்கை
உலகம் முழுவதும் உள்ள இந்து மத மக்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கோலகலமாக கொண்டாடினர். இந்தியாவில் ஆகஸ்ட் 31ம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. விநாயகரின் பிறப்பே விநாயக சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் விநாயகர் தனது தாயார் பார்வதியுடன் பூமிக்கு வந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார் என்று நம்பப்படுகிறது.

விடுமுறை
இந்த விஷேச நாளான அன்று மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும், பொதுவெளிகளிலும் விநாயகரின் சிலையை வைத்து வழிபடுகின்றனர். பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. பொதுவாக விநாயகர் சதுர்த்திக்குதான் நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. ஆனால் தென்னிந்தியாவில் விதிவிலக்காக விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்
செப்டம்பர் 9ம் தேதியான இன்று, அம்மாநிலத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக செப்டம்பர் 10ம் தேதியான நாளை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து சிலை கரைக்கும் நிகழ்வுகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மாவை சிறப்பு விருந்தினராக பாக்யநகர் கணேஷ் உத்சவ் சமிதி அழைத்திருக்கிறது.

சிறப்பு ஏற்பாடு
இது குறித்து பேட்டியளித்த உத்சவ் சமிதியின் பொதுச் செயலாளர் பகவந்த் ராவ் "ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்திக்கு ஒரு சிறப்பு விருந்தினருக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்த ஆண்டு நாங்கள் அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மாவை அழைத்தோம், அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதேபோல உதிபி பேஜாவர் சுவாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். தெலங்கானாவில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்துள்ளது.

மும்பையில் சிறப்பு
அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்த ஏற்பாடுகளை பாஜக தலைமையிலான அரசு சிறப்பாக செய்திருக்கிறது. மும்பையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு, 162 செயற்கை குளங்கள் மற்றும் 73 இயற்கை நீர் நிலைகள் இதற்காக தயார் நிலையில் இருக்கிறது. இந்த நீர்நிலைகளில் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக உயிர்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மட்டுமல்லாது, இப்பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள், படகுகள், கண்காணிப்பு கோபுரங்களையும் மும்பை மாநகராட்சி ஏற்படுத்தியிருக்கிறது என்பத குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications