ஊழலை ஒழிக்க 10 'தலைகளுடன்' களம் இறங்கியுள்ள நவீன ராவணன் கெஜ்ரிவால்..
டெல்லி: ஊழலுக்கு எதிராக புயலெனக் கிளம்பி இப்போது சுனாமி போல விஸ்வரூபம் எடுத்துள்ள கெஜ்ரிவாலுடன் 10 முக்கியப் பிரமுகர்கள் கை கோர்த்துள்ளனர்.
இந்த 10 பேரும் சமூகத்தில் பல்வேறு அந்தஸ்தில் இருப்பவர்கள் ஆவர்.
இந்த 10 பேருடன் நவீன ராவணன் போல கெஜ்ரிவால் தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளார். அந்த பத்து பேர் குறித்த ஒரு ரவுண்ட் அப்...
கேப்டன் கோபிநாத்
ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவியவர். இவர் ஜனவரி 3ம் தேதி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இவருக்கு அரசியல் புதிதில்லை. கடந்த 2009 லோக்சபா தேர்தலிலேயே பெங்களூர் தெற்கு தொகுதியில் பாஜகவின் அனந்த்குமாரை எதிர்த்துப் போட்டியிட்டவர். வரும் லோக்சபா தேர்தலிலும் இவர் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மல்லிகா சாராபாய்
பிரபல டான்ஸரும், சமூக சேவகருமான மல்லிகா சாராபாயும் கெஜ்ரிவாலுடன் இணைந்துள்ளார். இவர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்து வருபவர். இந்த வாரத்தில்தான் இவர் ஆம் ஆத்மியில் இணைந்தார். கடந்த 2009 லோக்சபா தேர்தலில் இவர் காந்தி நகரிலிருந்து அத்வானிக்கு எதிராக போட்டியிட்டார். பெரும் தோல்வியைச் சந்தித்தார். மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாயி்ன் மகள் இவர்.
அசுதோஷ்
பிரபலமான பத்திரிக்கையாளர் அசுதோஷ். ஐபிஎன் 7 டிவியில் பணியாற்றிய இவர் அதிலிருந்து விலகி ஆம் ஆத்மிக்கு வந்துள்ளார். டிவிட்டரில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தவர் இவர்.
மீரா சன்யால்
ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை செயலதிகாரி மீரா சன்யால். 2009 தேர்தலில் சுயேச்சையாக மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவர். டெல்லி சட்டசபைத் தேர்தலின்போது ஆம் ஆத்மியில் இணைந்து செயல்பட்டார். மும்பை தெற்கு தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட ஆர்வமாக உள்ளார்.
சமீர் நாயர்
49 வயதான சமீர் நாயர், என்டிடிவி, ஸ்டார் டிவி தலைமை செயலதிகாரியாக இருந்தவர். டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே கட்சிக்கு வந்து விட்டா்.
இன்போசிஸ் பாலகிருஷ்ணன்
48 வயதான பாலகிருஷ்ணன், இன்போசிஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினராக இருந்தவர். அதை விட்டு விட்டு ஆம் ஆத்மிக்கு வந்துள்ளார்.
கனுபாய் கல்சாரியா
முன்னாள் பாஜக எம்.எல்.ஏ கனுபாய் கல்சாரியா, குஜராத்தைச் சேர்ந்தவர். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக போராடியவர். 3 முறை தொடர்ச்சியாக மத்துவா சட்டசபைத் தொகுதியிலிருந்து வென்றவர். 2012 சட்டசபைத் தேர்தலின்போது பாஜகவை விட்டு விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
அல்கா லம்பா
38 வயதான அல்கா லம்பா, காங்கிரஸ் கட்சியில் 10 வருடம் இருந்தவர். கடந்த ஆண்டு டிசம்பரில் இவர் ஆம் ஆத்மிக்கு வந்து சேர்ந்தார். அகில இந்திய மகளிர் காங்கரிஸ் தலைவியாக இருந்தவர்.
பூல்கா
முன்னாள் சுப்ரீம் கோர்ட் வக்கீலான பூல்கா, 1984 கலவரத்தின்போது பாதிக்கப்பட்டோருக்காக சட்ட நிவாரணத்திற்காக பல ஆண்டுகள் போராடியவர். அகாலிதளத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தபோதும், அதில் சேராமல் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.
ஆதர்ஷ் சாஸ்திரி
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி. பிரபல காங்கிரஸ் தலைவர் அனில் சாஸ்திரியின் மகன். தான் பார்த்து வந்த ஆப்பிள் நிறுவன வேலையை விட்டு விட்டு ஆம் ஆத்மிக்கு வந்துள்ளார். தாத்தாவின் கெளரவத்தைக் காக்கும் வகையில் செயல்படுவதை விரும்புவதால் ஆம் ஆத்மிக்கு வந்ததாக கூறியுள்ளார்.
இவர்கள் போக இன்னும் பல பிரபலங்கள் ஆம் ஆத்மியில் தினந்தோறும் தங்களை இணைத்தவண்ணம் உள்ளனர்.