"காதல் கடிதம் தீட்டவே! மேகம் எல்லாம் காகிதம்".... பரீட்சை பேப்பரில் எழுதிய 10 மாணவர்கள் சஸ்பெண்ட்
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் பரீட்சை பேப்பரில்காதல் கவிதை, சினிமா பாடல்களை எழுதியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் 10 பேர் தேர்வு விடைத்தாளில் உரிய விடைக்கு பதிலாக காதல் கவிதை, சினிமா பாடல்களை எழுதியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் உள்ள பால்குர்கத் சட்டக் கல்லூரியில் பருவத் தேர்வுகள் (செமஸ்டர் எக்ஸாம்) நடைபெற்றன. இந்நிலையில் அந்த விடைத்தாள்களை திருத்தும் பணிகளை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் செய்து வந்தது.
இந்நிலையில் மேற்கண்ட கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்களின் பேப்பரை திருத்திய ஆசிரியர்களுக்கு ஒரே அதிர்ச்சி. அதாவது விடைக்குப் பதிலாக காதல் கவிதைகளையும், சினிமா பாடல்களையும் அவர்கள் எழுதியிருந்தனர்.
இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நடத்திய விசாரணையில் ஊர்ஜிதமானது. இதைத் தொடர்ந்து அவர்களை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் தேர்வின் மாண்பை குலைத்துவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
விடை தெரியவில்லை எனில் மாணவர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுவர். அல்லது வேறு பாடங்களையும் விடைகளில் ஆங்காங்கே நுழைத்து விடுவர். சில மாணவர்கள் கேள்வியையே எழுதி விடுவர். இன்னும் சிலர் வெள்ளைத் தாளை கொடுத்து விடுவர். ஆனால் இந்த மாணவர்களோ வினோதமாக காதல் கவிதைகள், சினிமா பாடல்களை எழுதியுள்ளனர்.