10 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் திடீர் ராஜினாமா.. காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த பாஜக? பரபரக்கும் குஜராத்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 10 முறை எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மோகன்சிங் ரத்வா திடீரென காங்கிரஸில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் அளித்தார்.
குஜராத்தில் அடுத்த மாதம் டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முதல் தேர்தல் முடிவு வரை தலைமை தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்து விட்டது.

சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல் களம்
இதனால் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கால் நூற்றாண்டாக பாஜகவின் கோட்டையாகவும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாகவும் திகழும் குஜராத்தில் இந்த முறையும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கால் நூற்றாண்டாக போராடி இன்னும் ஆட்சியை பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் இந்த முறை நடைபெறும் தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்று காங்கிரசும் முயற்சித்து வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் விலகல்
காங்கிரஸில் காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பொறுப்பை பெற்றிருப்பதால் புது கனவோடு குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற காங்கிரசும் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து 10 முறை எம்.எல்.ஏவாக பதவி வகித்த மூத்த தலைவர் மோகன்சிங் ரத்வா இன்று திடீரென அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதம்
மேலும் கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தையும் மோகன்சிங் ரத்வா குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூருக்கு அனுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், பழங்குடியின மக்களின் ஆதரவு பெற்றவரான 78 வயதான மோகன்சிங் ரத்வா விரைவில் நடக்க உள்ள தேர்தலில் ஏற்கனவே போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசார் அதிர்ச்சி
திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகியிருப்பது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியையும், சலசலப்பையும் எற்படுத்தியுள்ளது. இதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள மோகன்சிங் ரத்வா நாளை பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் தொகுதியில் பாஜக அரசு பழங்குடியின மக்களுக்காக பல்வேறு சலுகைகளை செய்துள்ளது.

பாஜகவில் சேர உள்ளதாக..
நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது. இதனால் நான் பாஜகவால் ஈர்க்கப்பட்டேன். இதனாலேயே இப்போது காங்கிரசில் இருந்து விலகியுள்ளேன்" என்றார். மேலும் அவர் கூறுகையில், "நான் இந்த முறை நடக்கும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என ஏற்கனவே அறிவித்துவிட்டேன். என மகன் பி இ சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளார். எனவே அவர் தான் இந்த தொகுதியில் போட்டியிடுவார். பாஜக என் மகனுக்கு இந்த தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கும் என்று 100 சதவீதம் நம்புகிறேன். அதே நேரத்தில் இந்த தொகுதியில் என் மகனுக்கு சீட் கொடுக்கப்போவதில்லை என்று காங்கிரசும் கூறவில்லை. காங்கிரஸ் இது குறித்து முடிவு எடுக்கும் முன்பே நான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன் " என்று தெரிவித்துள்ளார்.

பரபரப்பு
டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும், குஜராத் தேர்தல் களத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications