மும்பையில் லெப்டோஸ்பைரோஸிஸ் பாக்டீரியாவுக்கு அடுத்தடுத்து 12 பேர் பலி!
மும்பை: மும்பையில் மழையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் 12 பேர் லெப்டோஸ்பைரோஸிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்றுநோய் காரணமாக மரணம் அடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் கடந்த மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சிலருக்கு தொற்றுநோய் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த 21 நோயாளிகளில் 12 பேர் லெப்டோஸ்பைரோஸிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோயால் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்று நோய் தாக்கிய எலிகள் அல்லது நாய்களின் சிறுநீர் கலந்து சென்ற கழிவு நீரில் நடந்து வந்ததால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும், தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால் இறப்பு ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.