ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்: 14 குழந்தைகள் ஜலசமாதியான பரிதாபம்- 1,42,000 பேர் உயிருடன் மீட்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 1,42,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளம் காரணமாக, தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 14 குழந்தைகள் உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால், ஜீலம் நதி பெருக்கெடுத்து மாநிலம் முழுவதும் வெள்ளம் புகுந்தது.
தேசிய பேரிடர்
தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட இந்த பேரழிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன், முப்படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
1,42000 பேர் மீட்பு
12-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 1,42,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நிவாரணப்பணிகள்
மேலும், 13 டன் அளவிளான தண்ணீரை சுத்திகரிக்கும் மாத்திரைகள், நாள் ஒன்றுக்கு 1.2 லட்சம் தண்ணீர் பாட்டில்களை தயாரிக்கும் திறன் கொண்ட 6 தண்ணீர் சுத்திகரிக்கும் உபகரணங்கள் ஆகியன ஸ்ரீநகருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தொலை தொடர்பு சீரமைப்பு
பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் சேவையை சீரமைக்க தேவையான உபகரணங்களும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
உயிரிழப்புகள்
இந்த வெள்ளத்தினால் 200 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ள
நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ஜிபி பந்த் அரசு மருத்துவமனையில் 14 குழந்தைகள் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்த 14 குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜலசமாதியான மக்கள்
வெள்ளம் வடிந்து வரும் நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 29 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷிவ்புரா, ராஜ்பாக், ஜவகர்நகர், வாஷிராபாத், கோக்ஜிபாக், கரன் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 4 முதல் 10 அடி வரை வெள்ள நீர் புகுந்ததாகவும், இதனால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.