கொடுமை! ஸ்மார்ட் போன் வாங்க ரத்தத்தை விற்க வந்த 16 வயது சிறுமி! தடுத்த மருத்துவமனை நிர்வாகம்
கொல்கத்தா: ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தனது ரத்தத்தை விற்க ரத்த வங்கிக்கு வந்த 16 வயது சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் பலூர்காட் மாவட்டத்தில் உள்ளது ரத்த வங்கி. இங்கு திங்கள்கிழமை காலை 16 வயது சிறுமி தனது டியூஷனை கட் செய்துவிட்டு தனது சைக்கிளை பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு டபானிலிருந்து பலூர்காட்டிற்கு பேருந்தில் வந்தார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ரத்த வங்கி பிரிவை நோக்கி சென்றார். ரத்த வங்கியில் கனாக் குமார் தாஸ் என்பவர் இருந்தார். சிறுமியிடம் என்ன வேண்டும் என கேட்டார். அதற்கு அந்த சிறுமி எனது ரத்தத்தை விற்க வேண்டும் என்றார்.

அதிர்ச்சி
இதை கேட்டதும் குமார் தாஸ் அதிர்ச்சி அடைந்தார். உறவினருக்கு ரத்தத்தை வாங்க வந்திருப்பதாகதானே நினைத்தேன். ஆனால் நீ ரத்தத்தை விற்க வந்தேன் என்கிறாயே என கேட்டுள்ளார். அப்போதுதான் அந்த சிறுமி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

ஸ்மார்ட் போன்
அவரால் ஸ்மார்ட் போனை காசு கொடுத்து வாங்க முடியாததால் ரத்தத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் போனை வாங்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறார் உதவி மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் விரைந்தனர். சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

சிறுமி குறித்த தகவல்கள்
இதையடுத்து சிறுமியின் பெற்றோரை அழைத்து சிறுமி குறித்த தகவல்களை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில் எனது மகள் வீட்டை விட்டு சென்ற போது நான் வீட்டில் இல்லை. ரத்தத்தை விற்றால் பணம் கிடைக்கும் என்ற ஐடியா அவருக்கு எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை என்றார்.

காய்கறி வியாபாரி
சிறுமியின் தந்தை காய்கறி வியாபாரி, தாய் இல்லத்தரசி. சிறுமிக்கு 4 ஆம் வகுப்பில் படிக்கும் தம்பி உள்ளார். அந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் கவுன்சலிங் செய்யப்பட்டார். அப்போது அவர் தனது தம்பியின் சிகிச்சைக்காக நான் ரத்தத்தை விற்க வந்ததாக தெரிவித்தார். ஆனால் பின்னர் அவருக்கு புத்திமதி சொன்னதும் தன்னுடைய உறவினரின் செல்போனில் இருந்து ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்ததாகவும் அதற்கு கேஷ் ஆன் டெலிவரிக்கு பணம் கொடுக்க ரத்தத்தை விற்க வந்ததாகவும் தெரிவித்தார்.

ரூ 9 ஆயிரம்
மேலும் அந்த போனின் விலை ரூ 9 ஆயிரம் என்றும் அதை ஞாயிற்றுக்கிழமை ஆர்டர் செய்ததாகவும் வியாழக்கிழமை டெலிவரி கிடைத்து விடும் என்றும், பெற்றோரிடம் பணம் இல்லாததால் எனது ரத்தத்தை விற்று பணம் செலுத்தலாம் என வந்தேன் என்றார். இவர் சொல்வதை கேட்டு அதிர்ந்த அதிகாரிகள், அவருக்கு கவுன்சலிங் செய்து அனுப்பினர்.












Click it and Unblock the Notifications