இடுக்கி நிலச்சரிவு.... உயிரிழந்தவர்களில் 17 தமிழர்கள்... மேலும் 50 தமிழர்களின் கதியென்ன!!!
மூணாறு: கேரளாவில் இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் 17 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் தமிழகத்தில் புளியங்குடி, சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும் 50 தமிழர்கள் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
Recommended Video
கேரளாவில் இருக்கும் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப் பகுதியில் இடுக்கி அமைந்து இருப்பதாலும், இங்கு தேயிலை தோட்டங்கள் அதிகம் என்பதாலும், நிலச்சரிவு எளிதில் ஏற்பட்டு அழிவுகளும் தொடர் கதையாகி வருகிறது.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி பருவமழை தொடங்கியது. அன்று முதல் இதுவரை நடந்த மழை தொடர்பான விபத்துக்களில் 36 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் இருந்து 25 கி. மீட்டர் தொலைவில் உள்ள ராஜமலையை அடுத்த பெட்டிமுடி பஞ்சாயத்தில் ஒரு தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, தோட்டத்திற்கு அருகிலேயே குடியிருப்பும் உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன.

இந்த வீடுகளில் வசித்து வந்த 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தததாக கூறப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் உறங்கிக் கொண்டு இருந்தனர். என்ன நடக்கிறது என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்தனர். பொதுமக்கள், தீயணைப்பு படையினர், போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனைவரும் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

மண்ணுக்குள் புதைந்தவர்களில் அண்ணாத்துரை (46), ராஜேஸ்வரி (63), காந்திராஜ் (வயது 48), மயில்சாமி (48), ராமலட்சுமி (40), கண்ணன் (40), பாரதி (36), சிவகாமி (38), விஷால் (12), முருகன் (45), மணிவண்ணன் (26) உள்பட 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதும், புளியங்குடி, சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் 16 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 42 பேரின் கதி என்னவென்பது இன்னும் தெரியவில்லை. அவர்களும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று பலத்த மழை பெய்து பாலங்கள், சாலைகள் மணல் அரிப்பால் மூடப்பட்டதால் மீட்புப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50000 அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கயத்தாறு தமிழர்கள்
நிலச்சரிவில் சிக்கியவர்கள் 50 பேர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, பாரதிநகரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. கயத்தாறில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தூத்துக்குடி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என்று இவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications