சத்தீஸ்கர்: நக்சலைட்களுடன் துப்பாக்கிச் சண்டை- எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் பலி
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.
நக்சலைட்களின் ஆதிக்கத்திலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் சோட்டேபேத்தியா-பகஞ்சோர் வனப்பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்களை பிடிக்க எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு பட்டாலியன் வீரர்கள் அங்கு களமிறக்கப்பட்டனர்.

தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் ஆற்றங்கரையோரத்தில் பேச்சா என்ற கிராமத்தின் அருகாமையிலுள்ள அந்த வனப்பகுதியை சுற்றுவளைத்த எல்லைப்பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காட்டுக்குள் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களை வேறொரு பகுதி வழியாக சுற்றிவளைத்த நக்சலைட்கள், கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் எல்லைப்பாதுகாப்பு படையை சேர்ந்த விஜய் பிரகாஷ், ராகேஷ் நெஹ்ரா என்ற இருவீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் குண்டுகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் நக்சலைட்களுக்கும் எல்லைப்பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிக அளவில் போலீசாரை பலி கொடுத்துள்ள மாநிலமும் இதுதான். கடந்த ஆண்டு மட்டும் இந்த மாநிலத்தில் நக்சல் தாக்குதலுக்கு 80க்கும் மேற்பட்ட மத்திய, மாநில போலீசார் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நக்சல்கள் இருமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications