கர்நாடகாவில் அதிகாலையில் தடம்புரண்ட தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்- 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டு கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த லோகமான்ய திலக் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில், குல்பர்கா மாவட்டம், கலாபுராகியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மார்தூர் ரயில் நிலையம் வழியாக இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் வந்தபோது, ரயிலின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகியது.
Morning visuals from Duronto Express derailment site near Gulbarga at Martur. pic.twitter.com/vIIvtAh9Yl
— ANI (@ANI_news) September 12, 2015
இதனால் அந்த ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்து நேர்ந்தபோது பயணிகள் அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததால் தடம்புரண்ட பெட்டிகளுக்குள் இருந்த பயணிகள் திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியை உணர்ந்து அலறியடித்து கூச்சலிட்டனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் ரயிலில் சிக்கித் தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். காயங்களால் உயிரிழந்த 2 பேரின் பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, படுகாயமடைந்த 8 பேரை மீட்டு மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Saddened by Duranto accident.Ordered enquiry.Immediate medical relief& other assistance rushed.Chair Rail board asked to rush.
— Suresh Prabhu (@sureshpprabhu) September 12, 2015
இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தோரின் சிகிச்சை செலவுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது.