கார் விபத்து வழக்கு: சல்மான்கான் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல்
மும்பை: கார் விபத்து வழக்கில் மகராஷ்டிர அரசின் மனுவை விசாரிக்கும் முன் தன்னுடைய கருத்தை கேட்க வேண்டும் என்று நடிகர் சல்மான் கான் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த மே மாதம் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வெறும் சந்தேகத்தின்பேரில் சல்மான் கானுக்கு தண்டனை அளிக்க முடியாது என்று கூறி அவரை அந்த வழக்கில் இருந்து டிசம்பர் 10-ம் தேதி விடுதலை செய்தது.
சல்மானின் இந்த விடுதலையை எதிர்த்து மகராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் தற்போது சல்மான் கான் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அதில் மகாராஷ்டிர அரசை விசாரிக்கும் முன் என்னுடைய கருத்தை கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சல்மான் கானின் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்குமா? என்பது தெரியவில்லை.