அரசு பங்களாவை காலி செய்யாமல் அடம் பிடிக்கும் ஆ.ராசா, தயாநிதி மாறன்!
டெல்லி: மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகி, ஆண்டுகள் பல ஆன பிறகும், தயாநிதி மாறன், ஆ.ராசா உட்பட முன்னாள் அமைச்சர்கள் 22பேர் டெல்லியிலுள்ள அரசு பங்களாக்களை காலி செய்யாமல், தொடர்ந்து குடியிருந்து வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சொகுசு வசதிகள்
மத்திய அமைச்சர்கள், அமைச்சகங்களின் செயலாளர்கள் போன்றோருக்கு, டெல்லியில், குடியிருப்பு பங்களாக்கள் ஒதுக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் மூன்று படுக்கையறைகள் முதல், 8 படுக்கையறைகள் வரை உள்ள பங்களாக்கள் பதவியின் தகுதிக்கேற்ப ஒதுக்கப்படுகின்றன. எம்.பி.,க்கள் குடும்பத்துடன் தங்கவும் தனியாக வீடுகள் மற்றும் அறைகள் ஒதுக்கப்படுகின்றன.
முடியவே முடியாது..
ஆனால் அமைச்சர்களுக்காக அளிக்கப்பட்ட பங்களாக்களை அந்த அமைச்சர்கள் பதவி பறிபோனபிறகும் காலிசெய்வதில்லை. டெல்லியில் உள்ள அரசு பங்களாக்களின் பராமரிப்பு மற்றும் ஒதுக்கீடு, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது.
பிரதமரே சொன்னாலும் ம்ஹூம்..
பங்களாக்களை காலி செய்யாமல் இருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள், அவ்வப்போது நினைவூட்டு கடிதங்கள் எழுதி காலி செய்ய அறிவுறுத்துகின்றனர். எனினும், விடாப்பிடியாக முன்னாள் அமைச்சர்கள் தங்களின், பங்களாக்களை காலி செய்யாமல் காலத்தை கடத்தி வருகின்றனர். சில நேரங்களில் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டும், பங்களாக்களை காலி செய்யாதவர்களும் உண்டு.
நீரிழிவு, பாதுகாப்பு காரணங்கள்
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பங்களாவை காலி செய்யாமல் உள்ளார். இவருக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எனவே டெல்லியை தவிர வேறு எங்கு வசித்தாலும் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர் கூறிவருகிறார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்யாதவும், பங்களாவை விட மறுக்கிறார். தனக்கு இருதய நோய் இருக்கிறது, நீரிழிவு நோய் இருக்கிறது எனக்கூறி காலத்தை கடத்துகிறார்.
22 பேர் பட்டியல்
பல கட்சிகளை சேர்ந்த, 22 முன்னாள் மத்திய அமைச்சர்கள் இவ்வாறு பங்களாக்களை விட்டுக்கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதில் திமுகவின், தயாநிதி மாறனும், ஏ.ராஜாவும் உள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர், அகர்வால் மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து, இத்தகவல் வெளியே வந்துள்ளது.
இவர்கள்தான்..
தயாநிதி மாறன், ஏ.ராஜா- தி.மு.க, முகுல் ராய்- திரிணமுல் காங்கிரஸ், லாலு பிரசாத் பிரசாத்- ஆர்.ஜே.டி, தினேஷ் திவேதி- திரிணமுல் காங்கிரஸ், சவுகதா ராய்- திரிணமுல் காங்கிரஸ், அகதா சங்மா- தேசியவாத காங்கிரஸ், காங்கிரசை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, பவன்குமார் பன்சால், சி.பி.ஜோஷி, முகுல் வாஸ்னிக், சுபோத்காந்த் சகாய், ஹரீஷ் ராவத், பூட்டா சிங், வின்சென்ட் எச் பாலா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள்தான் பங்களாவை காலி செய்ய அடம்பிடிப்பவர்கள்.