17 சிறுபான்மையினர் கொன்று எரிப்பு.. குஜராத் கோத்ரா கலவர வழக்கில் 22 பேர் விடுதலை.. ஆதாரமில்லையாம்
2002 குஜராத் கோத்ரா கலவரத்தில் 17 பேரை கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரை குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
காந்திநகர்: குஜராத்தில் கடந்த 2002ல் ஏற்பட்ட கோத்ரா கலவரத்தில் 2 குழந்தைகள் உள்பட 17 சிறுபான்மையினரை கொலை செய்து உடல்களை தீயிட்டு எரித்ததாக 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை எனக்கூறி 22 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டில் பயங்கரமான கலவரம் நடந்தது. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம்தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி ரயிலுக்கு தீவைக்கப்பட்டது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இது பெரிய கலவரமாக மாறியது.
கோத்ரா உள்பட குஜராத்தின் பல இடங்களில் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கல்வீசிய அமைச்சர் நாசர்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் ஜெ., இருந்தால் இதுதான் நடக்கும்..ஓபிஎஸ் சுளீர்
22 பேர் அதிரடி கைது
இந்த கலவரம் குஜராத் மாநிலம் திலோல் கிராமத்துக்கும் பரவியது. இங்கு வசித்து வந்த சிறுபான்மையினத்தை சேர்ந்த மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 17 பேரை ஒரு கும்பல் கொன்றதோடு உடல்களை தீயிட்டு எரித்தது. இந்த சம்பவம் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ம் தேதி நடந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிபதி தீர்ப்பு
இதுதொடர்பான வழக்கு பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஹலால் டவுனில் அமைந்திருக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான விசாரணைகள் நடைபெற்று வந்தன. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ் திரிவேதி தீர்ப்பு வழங்கினார்.
ஆதாரங்கள் இல்லை என விடுதலை
அப்போது குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய அளவிலான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை எனக்கூறி 22 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த 17 பேர் படுகொலை சம்பவத்தில் பின்னடைவு ஏற்பட்டது ஏன் என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.
வழக்கு பின்னடைவு ஏன்?
அதாவது சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் வழக்கு தொடரப்பட்டு கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். மேலும் கொலை செய்யப்பட்டதாக கூறும் நபர்களின் உடல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் நதியின் கரையோரம் கிடந்த எலும்பு கூடுகளை கைப்பற்றி போலீசார் ஆதாரமாக தெரிவித்தனர். இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில் தான் ஆதாரமில்லை என தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை காலத்தில் 8 பேர் இறப்பு
இதுபற்றி குற்றம்சுமர்த்தப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் கோபால் சிங் கூறுகையில், ‛‛மொத்தம் 22 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் 8 பேர் வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டனர். தற்போது 22 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது'' என்றார்.