செம்மர கடத்தல் விவகாரம்: ஆந்திர சிறையில் இருந்து மேலும் 22 தமிழர்கள் ஜாமீனில் விடுதலை!
சித்தூர்: ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கூறி கைது செய்யப்பட்டவர்களில் 22 பேர் ஜாமீனில் விடுதலையாகியிருப்பது அவர்களின் உறவினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில் பொன்னுசாமி என்பவருக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதால் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி திருப்பதிக்கு சாமி கும்பிட சென்ற 32 தமிழர்கள் ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக வழக்குப்பதிவு செய்த அம்மிநில போலீசார் அவர்களை சித்தூர் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.
அவர்களில் 9 பேர் கடந்த 12-ந் தேதி விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 22 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய பொன்னுசாமி என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் கண்ணீர் விட்டு கதறிய பொன்னுசாமியின் மனைவி அவரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்கள் ஆந்திர காவல்துறை தங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததாக குற்றம்சாட்டினர்.
இதனிடையே மேலும் 35 தமிழர்களை செம்மரம் வெட்ட வந்ததாக கூறி இன்று ஆந்திரா போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது