செம்மர கடத்தல் விவகாரம்: ஆந்திராவில் 240 தமிழர்கள் கைது!!
ரேணிகுண்டா: தமிழகத்தைச் சேர்ந்த செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் 240 பேர் ஆந்திராவின் ரேணிகுன்டா ரயில்நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி அருகே சேஷாசலம் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஆந்திரப் பிரதேச வனத்துறை அதிகாரிகளும், மரக்கடத்தல் தடுப்பு சிறப்பு போலீஸ் படையினரும் இணைந்து நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் செம்மரக் கடத்தல்காரர்கள் 3 பேர் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். செம்மரக் கடத்தலை ஒழிப்பதற்காக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துவரும்நிலையில் என்கவுன்ட்டர் செய்யப்படும் அச்சத்தால் சேஷாசலம் மலைப்பகுதி காட்டுக்குள் பதுங்கியிருந்த செம்மரக் கடத்தல்காரர்களும், மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடப்பா மாவட்டம் கோடூர் பகுதியில் ஒரு மாந்தோப்பில் தஞ்சம் புகுந்த தமிழகத்தைச் சேர்ந்த 240 செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் சனிக்கிழமை அங்கிருந்து புறப்பட்டு கோடூர் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் காச்சிகுடா- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸில் அவர்கள் ஏறிக்கொண்டனர். சென்னை வந்தடைந்தவுடன் தங்களது ஊருக்குத் திரும்புவதற்கு அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கோடூர் ரயில் நிலையில் பணியிலிருந்த ரேணிகுன்டா சரக காவல்துறை ஆய்வாளர் பி.மது சந்தேகத்துக்குரிய வகையில் நூற்றுக்கணக்கானவர்கள் மும்பை எக்ஸ்பிரஸிலும், காச்சிகுடா சென்னை எக்ஸ்பிரஸிலும் ஏறிச் செல்வதாக உள்ளூர் போலீஸாருக்கும் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப்படையினருக்கும் தகவல் அளித்தார்.
இதையடுத்து ரேணிகுன்டா ரயில்நிலையத்துக்கு விரைந்து சென்ற சிறப்புப்படையினர் அங்கு வந்தடைந்த மும்பை மற்றும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்களை சோதனையிட்டு அதில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 230 செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை கைது செய்தனர்.