ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: 2 ஆண்டுகளுக்குப் பின் அரசு தரப்பு சாட்சி விசாரணை நிறைவு
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் மீது டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்னாள் தரகர் நீரா ராடியா, அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி உள்பட 153 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணையை முடித்துக்கொள்வதாக மூத்த அரசு வழக்கறிஞர் கே.கே.கோயல் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அரசு தரப்பு சாட்சி விசாரணை முடிவுற்றதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணை தொடங்கி 2 ஆண்டுகள் கடந்த நிலையில், அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை தற்போதுதான் நிறைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.