2ஜி வழக்கு: ஷாகித் பால்வாவுக்கு ரூ. 1லட்சம் அபராதம்
டெல்லி: 2ஜி வழக்கில் முரண்பாடான வாக்குமூலம் அளித்த ஷாகித் பால்வாவுக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறாக அளித்த வாக்குமூலத்தை ஷாகித் திருத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2ஜி வழக்கில், விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தாம் கூறிய பதில்களை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்பது ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வாவின் கோரிக்கை.
ஷாகித் பல்வாவின் மனு விசாரணைக்கு வந்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசிவருவதால் அவரது ஜாமினை ரத்து செய்ய நேரிடும் என நீதிபதி எச்சரித்திருந்தார். இதற்கு மன்னிப்பு கோரிய ஷாகித் பல்வா, தாம் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என விளக்கமளித்தார்.
இந்த மனு மீது வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி ஓ.பி.ஷைனி கூறியிருந்தார். ஆனால், உத்தரவு தயாராகாததால் இன்று மனு மீது உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில் முரண்பாடான வாக்குமூலம் அளித்த ஷாகித் பால்வாவுக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தவறாக அளித்த வாக்குமூலத்தை ஷாகித் திருத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.