2ஜி ஊழல்: சிபிஐ கோர்ட்டில் ராசா, கனிமொழி ஆஜர்: கைதாக வாய்ப்பு- ஜாமீன் கோரி மனு
டெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், ஆ.ராசா, கனிமொழி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர். மேலும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தயாளு அம்மாளை தவிர அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
ஆஜரான அனைவரும் கைதாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.
19 பேர் மீது குற்றப்பத்திரிக்கை
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்துடன் தொடர்புடையதாக தயாளு அம்மாள், கனிமொழி, ஆ. ராசா, ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கே. கோயங்கா, ஆசிஃப் பல்வா, ராஜீவ் பி. அகர்வால், கரீம் மொரானி, சரத் குமார், பி. அமிர்தம் ஆகிய 10 பேர் மீதும் ஸ்வான் டெலிகாம் (தற்போது எடிசலாட் டிபி), கலைஞர் டிவி, உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை
குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 பேரும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் 3ஆவது பிரிவின்படி, குற்ற நோக்குடன் சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை நடைபெற உடந்தையாகவோ, அச்செயலில் நேரடியாகவோ ஈடுபட்டுள்ளனர்.
ரூ.200 கோடி ஆதாயம்
அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு ஆதாயமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ. 200 கோடி அளவுக்கு ராசா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளுக்கு லஞ்சமாக வழங்கியுள்ளது. இப் பணம், தனது குழும நிறுவனமான டிபி ரியாலிட்டி மூலம் வெவ்வேறு நிறுவனங்கள் வழியாக கைமாற்றி, கடைசியாக கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்டது. கடன் வடிவிலும் பங்குகள் வாங்குவது என்ற போர்வையிலும் மேற்கொள்ளப்பட்ட இப் பரிவர்த்தனை சட்டப்பூர்வமாக தோன்றும் வகையில் ஆவணங்கள் ஜோடிக்கப்பட்டன.
கலைஞர் டிவி கணக்கு
அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு விசாரணை தொடங்கியபோது அப் பணத்துக்கு கூடுதலாக ரூ. 223.44 கோடியாக, வாங்கிய வழியிலேயே திருப்பிக் கொடுத்து அதைச் சட்டப்பூர்வ பரிவர்த்தனையாக கலைஞர் டிவி கணக்குக் காட்டியுள்ளது. இவை அனைத்தும் சிபிஐ வழக்கிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரூ. 200 கோடி மதிப்புக்கான கலைஞர் டிவி சொத்தை 2011, ஆகஸ்ட் 30ஆம் தேதி முடக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, மேற்கண்ட 19 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன' என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி,ஆ.ராசா ஆஜர்
இது தொடர்பாக மே 26ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றவர்களுக்கு, நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
ஜாமீன்கோரி மனு
சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள அனைவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
15 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த ராசா
2ஜி முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர்ஆ.ராசா கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். 15 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த அவர், கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 16ம் விடுதலையானார்.
சிறையில் இருந்த கனிமொழி
2ஜி முறைகேட்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று குற்றம் சாட்டிய சிபிஐ, கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ஆகியோரது பெயர்களை இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்த்தது. இதனையடுத்து கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
7 மாத சிறைவாசம்
7 மாத சிறைவாசத்திற்குப்பின்னர் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அவர் விடுதலைசெய்யப்பட்டார்.
மீண்டும் கைதாக வாய்ப்பு
2ஜி வழக்கில் ராசா, கனிமொழி ஆகிய இருவரும் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்து தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் கைதாகும் சூழல் உருவாகியுள்ளதால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.