ஈவ் டீசிங் அட்டகாசம்.. ஓடும் பஸ்சிலிருந்து குதித்த 3 பள்ளிச் சிறுமிகள்
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் ஈவ் டீசிங் தொல்லையால் பெரும் அவதியடைந்த 3 பள்ளிச் சிறுமிகள் ஓடும் பஸ்சிலிருந்து குதித்த செயல் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
சாக்சி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கீழே குதித்ததில் ஒரு மாணவி காயமடைந்தார்.

இதுகுறித்து முதுநிலை எஸ்.பி. அனூப் மாத்யூ கூறுகையில், மூன்று பேரும் ஒரே பள்ளியி்ல் படித்து வருபவர்கள் ஆவர். சாக்சியில் பஸ் ஏறியுள்ளனர். அப்போது அங்கிருந்த சில ஆண்கள் இவர்களிடம் டீஸ் செய்துள்ளனர். பஸ் டிரைவர், கண்டக்டரிடம் இதுகுறித்து மாணவிகள் கூறியும் பலன் இல்லை. பஸ்சை நிறுத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர். ஆனால் பஸ் நிறுத்தப்படவில்லை. இதையடுத்து 3 பேரும் கீழே குதித்து விட்டனர்.
விசாரணையில் இந்த மாணவிகளை கிண்டல் செய்தவர்கள், பஸ் டிரைவரின் நண்பர்கள் எனத் தெரிய வந்துள்ளது. காயமடைந்த சிறுமியை அப்பகுதியில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமிகளை கேலி செய்த 2 பேரையும், பஸ் டிரைவரையும் கைது செய்துள்ளோம். பஸ்ஸை பறிமுதல் செய்துள்ளோம். மற்றவர்களையும் தேடி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications