என் பொண்டாட்டியை முறைச்சு பார்க்குறியா? தலித் இளைஞரை சரமாரியாக சுட்ட கணவர்.. 3 பேர் பலி
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியை முறைத்து பார்த்ததாக கூறி ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிச்சூடு
மத்தியப் பிரதேசத்தில் மற்றொரு சமூகத்தை சேர்ந்த நபர், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோர் என மூன்றுபேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாமோஹ் பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த மனக் அஹிர்வார் என்பவர் ஜகதீஷ் படேலின் மனைவியை முறைத்து பார்த்ததாக இருவருக்கும் பிரச்னை தொடங்கியுள்ளது.
வாக்குவாதம்
தீபாவளியான திங்கட்கிழமையன்று இது தொடர்பாக இரு குடும்பங்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளன. ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக உருவாக இருந்த நிலையில் ஊர் தலைவர்கள் சேர்ந்து இதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து வாக்குவாதம் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பினரும் கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து அடுத்த நாள்(அக்.25) காலை படேல் 5 பேருடன் அஹிர்வார் வீட்டிற்கு வந்துள்ளார்.
உயிரிழப்பு
அங்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் படேல் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அஹிர்வார், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் மீது சுட்டுள்ளார். இதில் அஹிர்வார் மற்றும் அவரது பெற்றோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அஹிர்வாரின் சகோதரர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து நாங்கள் கேள்விப்பட்டவுடன் விரைந்து சென்று பார்த்தோம்.
கைது
முக்கிய குற்றவாளியான படேலை மட்டும் பிடிக்க முடிந்தது. ஆனால் அவருடன் வந்த மற்ற 5 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்" என்று டாமோஹ் எஸ்பி டெனிவார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறியுள்ளார். அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.