3 'ரா' ஏஜெண்டுகள் கைது: பாகிஸ்தானின் அடுத்த சேட்டை
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ரா உளவு அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்திய உளவு அமைப்பான 'ரா'வை சேர்ந்த 3 பேரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அவர்கள் 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இது குறித்து இந்திய அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. கைது குறித்த தகவலை உறுதிபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக டெல்லியில் உள்ள அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் குல்பூஷன் யாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரா அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது.
இதற்கிடையே தங்கள் நாட்டு அதிகாரி ஒருவரை நேபாளத்தில் இருந்து இந்தியா கடத்திச் சென்றுவிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஐஎஸ்ஐ வேண்டுகோளின்படி நேபாளத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் ஜாஹிரை இந்தியா கடத்திவிட்டது என்று அவரின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த புகாரை இந்தியா மறுத்துள்ளது.