அட தமாசு இல்லை.. தெலுங்கானாவில் 100 முதல் 2017 வயதுள்ள நபர்கள் 21,000 பேர் வாழ்கிறார்களாம்
டெல்லி: இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 68.3 ஆண்டுகள் ஆனால் தேர்தலை விரைவில் சந்திக்க உள்ள, தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 21,000 வாக்காளர்கள் வயது, 100 முதல் 2017 ஆண்டுகள் என்று வாக்காளர் அடையாள அட்டையில் தவறாக இடம் பெற்றுள்ளாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய, தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் ஆட்சி கலைப்புக்கு பரிந்துரை செய்ததன் காரணமாக, இவ்வாண்டு இறுதியிலேயே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
போலி வாக்காளர்கள்
இந்த நிலையில், தெலுங்கானாவில் அதிகபட்ச போலி வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ மர்ரி சஷிதர் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உடனடியாக தேர்தல் ஆணையம், தவறுகளை நீக்கி ஒழுங்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
வாக்காளர் நிலை
தெலுங்கானாவில் மொத்தம் 2.61 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 30.13 லட்சம் வாக்காளர்கள் போலியானவர் என்கிறது இந்த மனு. மேலும், 20 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வயது வித்தியாசம்
பெயர், பாலினம், வயது உள்ளிட்டவற்றை பரிசோதித்து பார்த்தபோது, 21,000 அளவுக்கான வாக்காளர்கள் வயது 100 முதல் 2017 வரை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சந்திரசேகர ராவ் திட்டம்
வேட்புமனு பட்டியலில் முறைகேடு இருப்பதால்தான், உடனடியாக தேர்தலை நடத்த சந்திரசேகர ராவ் திட்டமிட்டதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு போதிய அவகாசம் தராமல் தேர்தல் நடைபெற இருப்பதால் அது சந்திரசேகர ராவுக்கு ஆதாயம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.