வங்கக் கடலில் மாயமான படகுகளில் 22 கரை திரும்பின... மீதமுள்ள 15 படகுகள் கதி என்ன?
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மீன் பிடிப்பதற்காக வங்கக் கடலுக்கு 40 படகுகளில் சென்ற 600 மீனவர்களில் 360 பேர் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர். மீதமுள்ள 240 மீனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தை சேர்ந்த 600 மீனவர்கள் சுமார் 40 படகுகளில் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றனர். வங்காள விரிகுடாவின் காக்த்விப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் திடீரென மாயமானார்கள்.
இதற்கிடையே, கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் 2 படகுகள் கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 32 பேர்களில் 25 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேரை காணவில்லை. ஒவ்வொரு படகிலும் சுமார் 16 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். காயம் அடைந்தவர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாயமான படகுகளை மீட்கும் பணியையும் அரசு தொடங்கியது. இது தொடர்பாக தகவலறிந்த கடற்படையினர் மாயமான படகுகளையும், மீனவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க ஒடிசா மாநிலத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு கப்பல் ஒன்று அனுப்பப்பட்டது. இதற்கிடையே காணாமல் போன படகுகளில் 25 படகுகள் பத்திரமாக கரை திரும்பியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே மீதமுள்ள 15 படகுகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதில் 240 மீனவர்கள் இருந்தனர். கடலில் வீசிய திடீர் புயலில் இம்மீனவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.