ஒடிஷா வெள்ளம்.. 4,393 விலங்குகள்..1.72 லட்சம் பறவைகள் பலி
புவனேஸ்வர்: பாய்லின் புயல் உருவாக்கிய ஒடிஷா வெள்ளத்தில் 4,393 கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளும் 1.72 லட்சம் பறவைகளும் பலியாகி உள்ளன.
ஒடிஷா மாநிலத்தை அண்மையில் சக்தி வாய்ந்த பாய்லின் புயல் தாக்கியது. இந்தப் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்றும் வீசியது. பெருமழை கொட்டி வெள்ளம் கரைபுரண்டோடியது.
இந்த வெள்ள பாதிப்பு குறித்து ஒடிஸா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் மொஹாபாத்ரா நேற்று புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசுகையில். வெள்ளத்தில் ஆடு, மாடு உள்பட 4,393 பெரிய விலங்குகளும், கோழிகள் உள்பட 1,70,970 பறவைகளும் உயிரிந்துள்ளன.
பேராபத்தின்போது 31,062 ஆடு, மாடுகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டன. இருப்பினும் அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளை வெளியேற்ற முடியவில்லை.
இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு 533.25 மெட்ரிக் டன் உணவுகள் விநியோகிக்கப்பட்டு உள்ளன என்றார்.