கர்நாடகா எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்ட 481 தமிழக பேருந்துகள்!
மைசூர்: காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்தால் இருமாநில எல்லையில் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது. 481 தமிழக பேருந்துகள் கர்நாடகா எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரி ஆற்று நீரை தமிழகத்துக்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் கர்நாடக காவிரி ஹோராத சமிதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலையில் போராட்டத்தைத் தொடங்கினர். அவர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அம்மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் போராட்டம்
Cauvery water issue: Farmers protest in Shrirangapattana taluk of Mandya, block road #Karnataka pic.twitter.com/pVM2UBuQQR
— ANI (@ANI_news) September 6, 2016
கர்நாடக விவசாயிகளும் மாநில விவசாயிகளும் சாலைகளுக்கு வந்து போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பேருந்துகள் நிறுத்தம்
Tamil Nadu transport buses & vehicles from TN halted at Hosur border bus stand due to protests in parts of Karnataka over Cauvery issue
— ANI (@ANI_news) September 6, 2016
கர்நாடக மாவட்டத்தில் வலுக்கும் போராட்டங்களால் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையில் கர்நாடகாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதே போல, கர்நாடக எல்லையிலும் தமிழகப் பதிவு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. 481 தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விவசாயிகள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக இரு மாநில எல்லையிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படுவதால் இதனால், இரு மாநில எல்லையில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.