அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்
திஸ்பூர்: அசாம் மற்றும் மிசோரம் மாநில எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மோதலில் 6 அசாம் காவலர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் மற்றும் மிசோரம் மாநில எல்லையில் பல மாதங்களாகவே எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 'ஐட்லாங்நார்' என்ற பகுதியை மிசோரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அசாம் காவல்துறை, அந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
அசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது
அசாம் - மிசோம் எல்லை
அப்போதில் இருந்தே சர்ச்சைக்குரிய பகுதியைச் சுற்றி இரு மாநிலங்களுக்கிடையில் மோதல்கள் தொடர்கின்றன. இது குறித்து இரு மாநில முதல்வர்களும்கூட ட்விட்டரில் தளத்தில் மோதி வருகின்றனர். எல்லையிலிருந்த விவசாயிகளின் குடிசைகள் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதாகவும் இதனால் எல்லை பகுதியில் உள்ள கிராமங்களிலும் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் மிசோரம் மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
6 போலீசார் பலி
அதன் பிறகு இன்று அசாம் மாநிலத்தின் எல்லையோரம் அமைந்துள்ள குலிசெர்ரா பகுதியில் சாலை அமைப்பும் பணி தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் வன்முறையாக மாற, இரு தரப்பில் கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு ஆகிய வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளன. இந்த வன்முறையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டும் வகையில் ட்வீட் செய்து, அதில் உள் துறை அமைச்சர் அமித் ஷாவையும் டேக் செய்துள்ளனர்.
அசாம் முதல்வர்
இது வன்முறை தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டரில், "மிசோரம் மாநில முதல்வர் சோரம்தங்கா உடன் பேசினேன். இரு மாநிலங்களுக்கு இடையே அமைதி தேவை என வலியுறுத்தினேன். தேவைப்பட்டால் இந்த விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவும் தயாராக உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், வன்முறை தொடர்பான வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ள அவர், நிலைமை இப்படியிருந்தால் எங்களால் எப்படி அரசை நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மிசோரம் முதல்வர்
அதேபோல மிசோரம் முதல்வர் சோரம்தங்காவும் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லையில் இருக்கும் காவலர்களை அசாம் போலீஸ் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என டவீட் செய்துள்ளார். மேலும், கச்சார் பகுதியில் மிசோரம் திரும்பும் அப்பாவி பொதுமக்கள் குண்டர்களால் தாக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டிய வன்முறை தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா
உள் துறை அமைச்சர் அமித் ஷா வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்தான் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த கூட்டம் முடிந்த சில நாட்களுள் மீண்டும் இதுபோன்ற மோசமான வன்முறை அசாம் மிசோரம் எல்லையில் அரங்கேறியுள்ளது. இதையடுத்து இரு மாநில முதல்வர்களையும் தொலைப்பேசி வழியில் தொடர்புகொண்டுள்ள உள் துறை அமைச்சர் அமித் ஷா, எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.