”அள்ளிக் கொடுக்கும் அட்சயப் பாத்திரம்” - இரிடியத்தை தொடர்ந்து புது மோசடியில் சிக்கி 6 பேர் கைது!
காளஹஸ்தி: சித்தூரில் அட்சயப் பாத்திரம் தன்னிடம் இருப்பதாக கூறி ரூபாய் 1 லட்சம் மோசடி செய்ய முயன்ற 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. வெளியூரில் இருந்து ஆந்திராவுக்கு ஆட்களை வரவழைத்து அவர்களிடம் தங்க நாணயம் மற்றும் அட்சய பாத்திரம் விற்பனை செய்வதாக கூறி பலர் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கண்ட சம்பவங்களை தட்டிக்கேட்டாலோ அல்லது பொருட்களை வாங்காமல் நைசாக நழுவி வெளியேற முயன்றாலோ மோசடி பேர்வழிகள் தங்களிடம் உள்ள அடியாட்களை ஏவி விட்டு தாக்குதலில் ஈடுபடுவதும் அரங்கேறி வருகிறது.
போலீசில் புகார்:
இந்தச் சம்பவத்தைபோல் சித்தூர் மாவட்டம் குப்பத்தை அடுத்த சாந்திபுரம் மண்டலம் ரால்லபூடுகூரு பகுதியில் நடந்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சித்தய்யநகரை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆந்திராவுக்கு வந்து குப்பத்தை அடுத்த சாந்திபுரம் மண்டலம் ரால்லபூடுகூரு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
குடும்பப் பிரச்சினைகள் தீர வழி:
அதில் அவர், "தமிழ்நாடு மாவட்டம் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் நடேஷ். இவரும், நானும் நண்பர்கள். எங்கள் வீட்டில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. பிரச்சினை தீர ஏதேனும் வழி சொல்லுங்கள் என நடேஷிடம் கேட்டேன். அதற்கு அவர், குடும்ப பிரச்சினை தீர என்னுடைய நண்பர்களிடம் அட்சய பாத்திரம் ஒன்று உள்ளது. அதனை வாங்கி வீட்டில் வைத்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்றார்.
சித்தூரில் அட்சயப் பாத்திரம்:
அந்த அட்சய பாத்திரம் எங்கு உள்ளது என்று கேட்டதற்கு அதற்கு நடேஷ், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தை அடுத்த சாந்திபுரம் மண்டலம் நஞ்சம்பேட்டை பகுதியில் எனக்கு தெரிந்த நண்பர்கள் 2 பேரிடம் உள்ளது என்றார். அந்த அட்சய பாத்திரத்தை வாங்குவதற்காக நானும், நடேசும் கடந்த 7 ஆம் தேதி நஞ்சம்பேட்டை பகுதிக்கு சென்றோம்.
முன்பணமாக 10 ஆயிரம்:
அங்கு நடேஷின் நண்பர்கள் பலர் இருந்தனர். அவர்களிடம் இருந்த ஒரு பாத்திரத்தை வைத்துக் கொண்டு, அதனை அட்சய பாத்திரம் எனக் கூறி என்னிடம் ரூபாய்1 லட்சம் பேரம் பேசினார்கள். அதற்கு நான் முன்பணமாக முதலில் ரூபாய் 10 ஆயிரத்தை கொடுத்தேன். பின்னர் மறுநாள் வந்து மீதமுள்ள ரூபாய் 90 ஆயிரத்தை கொடுத்து விட்டு அட்சய பாத்திரத்தை வாங்கி செல்வதாக தெரிவித்தேன்.
மொத்த பணமும் வேண்டும்:
மறுநாள் ரூபாய் 90 ஆயிரம் பணத்துடன் நானும், நடேசும் நஞ்சம்பேட்டை பகுதிக்கு மீண்டும் சென்றோம். அங்கு நடேஷின் நண்பர்கள் 2 பேர் வந்து மொத்த பணத்தையும் கொடுத்தால் தான் அட்சய பாத்திரத்தை கொடுப்போம். இல்லையென்றால் அட்சய பாத்திரத்தை கொடுக்க மாட்டோம் எனத் தெரிவித்தனர்.
முதலில் காசு:
முதலில் அட்சய பாத்திரத்தை என்னிடம் கொடுங்கள், அதன் பிறகு ரொக்கப்பணத்தை நான் கொடுக்கிறேன் என்றேன். ஆனால், அவர்கள் முதலில் நீங்கள் ரொக்கப்பணத்தை கொடுங்கள், அடுத்த நிமிடமே நாங்கள் அட்சய பாத்திரத்தை கொடுக்கிறோம் என்றனர்.
பேச்சிலேயே வாக்குவாதம்:
இவ்வாறு பேசும்போதே எங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அவர்கள் வாக்கு வாதம் செய்ததில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே நான் அவர்களிடம் இருந்து விடைபெற்று வந்து விட்டேன். அட்சய பாத்திரம் எனக் கூறி என்னை மோசடி செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
6 பேரிடம் விசாரணை:
புகாரின் பேரில் ரால்லபூடுகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சப் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் மேற்கண்ட நஞ்சம்பேட்டை பகுதிக்கு சென்றனர். அந்தப் பகுதியில் இருந்த நடேஷின் நண்பர்கள் தப்பி ஓட முயன்றனர். நடேஷ் மற்றும் நண்பர்களான கருப்புசாமி, சதீஷ், சங்கர், தங்கராஜ், ஜமீலா என மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்தபோது மேற்கூறிய விவரம் தெரிய வந்தது.
போலீசார் பறிமுதல்:
இதையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 2 ஆயிரத்து 500 ரொக்கம், ஒரு சொகுசு கார், அட்சய பாத்திரம் எனக் கூறப்பட்ட ஒரு தாமிரக்குடம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.