காஷ்மீரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்.. 6 போலீஸார் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அச்சாபல் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 6 போலீஸார் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனந்தநாக் மாவட்டம் அச்சாபல் பகுதியில் தங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தாக்குதல் மூண்டது. இதில் 6 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
சில மணி நேரங்களுக்கு முன்புதான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஜூனைத் மட்டூ என்பவர் கொல்லப்பட்டார். இதற்குப் பழி வாங்கும் வகையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
மேலும் இன்று காலை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடந்த இன்னொரு தாக்குதலில், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடந்த அச்சாபல் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.