பெங்களூர் ஏடிஎம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது கொள்ளை... 6 தமிழர்கள் கைது!
பெங்களூர்: பெங்களூரில் ஏடிஎம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது ரூ 11 லட்சம் கொள்ளையடித்த 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையம் அருகே கர்நாடக வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக ஊழியர்கள் காரில் வந்தனர். அவர்கள் காவலாளிகள் உதவியுடன் பணம் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் டிரைவர் அருகே 10 ரூபாய் நோட்டுகளை வீசிவிட்டு, காரில் இருந்த ரூ.11 லட்சத்தை கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து வில்சன் கார்டன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படை போலீசார், ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்கள்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் சிட்டி ரெயில் நிலையம் மற்றும் ஓசூர் பஸ் நிலையத்தில் நின்ற கொள்ளையர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த ராஜேஷ், சங்கர், ஜெகநாதன், செந்தில், ஞானவேல், குமரேசன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களிடம் தான் மீதி பணம் ரூ.8.5 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த 2 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications