சோனியா, மோடி தொகுதிகளில் 30-ந் தேதி வாக்குப் பதிவு- நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு!!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் நாளை மறுநாள் பிரசாரம் முடிவடைய உள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. மொத்தம் 349 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.
30-ந் தேதி 7வது கட்ட தேர்தல்
ஏப்ரல் 30ந் தேதி 7வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
குஜராத், பஞ்சாபில் ஒரே கட்டம்
இதில் குஜராத்தில் 26 தொகுதிகள், பஞ்சாபில் 13 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
எஞ்சிய 7 மாநிலங்களில்...
மேலும் ஆந்திராவில் 17 தொகுதிகள், பீகாரில் 7 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி தாத்ரா நகர் ஹவேலி, மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரேதேசங்களில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
பிரபலங்கள்..
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி களமிறங்கியுள்ள குஜராத்தின் வதோதரா, அக்கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கின் லக்னோ, அருண் ஜேட்லி போட்டியிடும் அமிர்தசரஸ் ஆகியோர் 7வது கட்ட தேர்தல் களத்தில் இருக்கும் முக்கிய வேட்பாளர்கள்.
நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு
இத்தொகுதிகளில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வடைய இருப்பதால் உச்சகட்டமாக வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது.