வீட்டுப்பாடம் செய்யாததால் முழங்காலிட வைக்கப்பட்ட 9 வயது மாணவி பலி: பள்ளியை சூறையாடிய பெற்றோர்
கரீம்நகர்: தெலுங்கானாவில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்ததற்காக ஆசிரியை அளித்த தண்டனையால் 9 வயது மாணவி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஹுசுராபாத்தில் உள்ளது விவேகவர்த்தினி ஆங்கில பள்ளி. அந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார் கோலிபகா ஹஷ்ரிதா(9). அவர் கடந்த 16ம் தேதி வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனால் கணக்கு ஆசிரியை கலா ஹஷ்ரிதாவை முழங்காலிடுமாறு கூறியுள்ளார். அரை மணிநேரம் கழித்து மாணவி தனக்கு முழங்காலும், தொடையும் வலிப்பதாக ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஆசிரியை கண்டுகொள்ளவில்லை.
மாலை வீட்டிற்கு சென்ற மாணவி கால் வலி தாங்காமல் அழுதுள்ளார். இதையடுத்து அவரை அவரின் தந்தை சம்மைய்யா அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தம் கட்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வாரங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டு நிலைமை மோசமாகியுள்ளது. உடனே அவர் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மாணவியின் உடலை வாங்கிக் கொண்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு பிறருடன் சேர்ந்து பள்ளியை சூறையாடினர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி ஸ்ரீனிவாஸ் சாரி பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன் பிறகே போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.