குதிரை வால் ஜடை போட்டு வந்தது ஒரு குற்றமாம்மா... அதற்காக இப்படியா அடிப்பீங்க?
மாணவி குதிரைவால்ஜடை போட்டதால் ஆசிரியை பலமாக தாக்கியுள்ளார்.
ஹைதராபாத்: எது எதுக்கு ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது என்று விவஸ்தை வேண்டாமா? மாணவர்களை நல்வழிப்படுத்த எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன. ஆனால் ஹைதராபாத்தில் ஒரு ஆசிரியை தன் மாணவியிடம் நடந்து கொண்ட விதம் பெற்றோர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள பகுதி ஹிமாயத்நகர். இங்கு தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படித்து வருபவர் 9 வயது மாணவி ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பள்ளிக்கு வரும்போது குதிரை வால் ஜடை போட்டுக் கொண்டு வந்திருக்கிறார். அது ஒரு குற்றம் என்றும், பள்ளியின் விதிமுறையை மீறிவிட்டதாகவும் கூறி ரம்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார் அவரது ஆசிரியை.
வகுப்பிலிருந்தும் வெளியே தள்ளியுள்ளார். இதில் ரம்யாவுக்கு முகத்தில் பலமாக அடிப்பட்டது.அத்துடன், டீச்சர்களை பற்றி வீட்டில் போய் புகார் சொல்லுவியா? முடிந்தால் நான் இப்படி அடிப்பதையும் போய் உன் வீட்டில் சொல்லு பார்க்கலாம் என்று கூறி திரும்ப திரும்ப அடித்ததாக கூறப்படுகிறது. காலையில் பள்ளி சென்ற மகள், படுகாயங்களுடன் வீட்டுக்கு திரும்பி வருவதைகண்ட பெற்றோர், அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக காவல்நிலையம் விரைந்து, சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியரை வேலையிலிருந்தே பணி நீக்கம் செய்ய வேண்டும் என புகாரும் அளித்தனர்.
இனி இதுபோல நடக்காது
செல்லமாக வளர்க்கும் மகளை இப்படி கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியையின் நடவடிக்கை குறித்து ரம்யாவின் பெற்றோர் கொதித்துபோய் இருக்கிறார்கள். இதுபற்றி அவர்கள் கூறும்போது, "இப்படி எங்க டீச்சர் நடந்து கொள்வது இது 3-வது முறை. சாதாரண விஷயத்துக்கு இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் நடந்துக்கிட்டாங்க. அப்பவே நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தோம். ஆனா, "ஆசிரியர் புதுசா வேலையில் சேர்ந்திருப்பவர். இனி இதுபோல நடக்காது" என்று எங்களைத்தான் சமாதானம் செயது அனுப்பினார்கள்.
வீட்டுப்பாடம் செய்யவில்லை?
அப்பவே பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னைக்கு இப்படி நடந்திருக்குமா? ஏதாவது குறை இருந்தால் பள்ளிக்கு என்று ஒரு டைரி இருக்கிறது. அதில் சொல்லி இருந்திருக்கலாமே" என அடுக்கடுக்காக ஆதங்கத்தையும், குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகமோ, நாங்கள் ஒன்றும் குதிரை வால் போட்டதற்காக அடிக்கவில்லை, ரம்யா வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்யாததாலேயே தண்டனை கொடுத்தோம் என தெரிவித்துள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தோப்புக்கரணம் போடலாமே?
எப்படி பார்த்தாலும் அடிப்பது என்பது தவறுதானே? மனித பிறவியில் ஒருவரை அடிக்கும் உரிமை யாருக்குமே கிடையாது. முன்பெல்லாம் ஆசிரியர்கள் தங்கள் கையில் மூங்கில் பிரம்பு ஒன்றை வைத்துக் கொள்வார்கள். ஆனால் மாணவர்களை அடிப்பது அபூர்வம்தான். மாணவர்கள் எந்தவித தவறை செய்தாலும், அவர்களின் தொடையை பிடித்து திருகுவார்கள். வலி பொறுக்க முடியாமல் மாணவர்கள் கதறுவார்கள். இந்த தொடை திருகலுக்கு பயந்தவர்களும், தங்களை திருத்திக் கொண்ட மாணவர்களும் தமிழகத்தில் ஏராளம். இதை தவிர தோப்புக்கரணம் போட சொல்வார்கள், விளையாட்டு மைதானத்தை 2 முறை சுற்றி வர சொல்வார்கள். கதை பிடித்து திருகுவார்கள். திருத்துவதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்த தண்டனைகளை வழங்கினாலும், இந்த தண்டனைகள் அனைத்துமே அந்த மாணவனை உடல்ரீதியாக பலப்படுத்துபவையாக இருந்தன. தண்டனைகள்கூட உடற்பயிற்சியாகத்தான் கையாளப்பட்டது. இன்றைய காலகட்டத்தில்கூட இதுபோல சின்ன சின்ன தண்டனைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்க முன்வரலாமே?
சுமூக உறவு தழைக்கும்
இப்போதெல்லாம் மாணவர்களை அடிக்கக்கூடாது என்று சட்டமே வந்துவிட்டது. ரம்யா செய்தது சமூகத்துக்கு விரோதமான செயல் கிடையாது. இனி இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஆசிரியர்கள் பிரம்பு எடுப்பதை தவிர்த்து, அன்பான வழியில் மாணவர்களை நல்வழிப்படுத்தினால் நன்றாக இருக்கும். அதேபோல ஆசிரியர்கள் தவறு செய்தால், அதை பள்ளி நிர்வாகமும் தலையிட்டு தடுக்க முன்வரவேண்டும். அப்போதுதான் பெற்றோர்-பள்ளிகள் இடையே ஒரு சுமூக உறவு என்றுமே தழைத்தோங்கும்.