வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க பக்கோடா போடலாம்! மாணவரின் விபரீத ஆய்வு.. முடிவு என்ன தெரியுமா ?
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி, வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க பக்கோடா போடலாம் என்ற கூறிய பிரதமர் மோடியின் கருத்துக்கு ஆதரவாக ஆய்வு கட்டுரை எழுதி உள்ளது தற்போது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மோடி 'பக்கோடா விற்றுகூட இளைஞர்கள் தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கலாம், இதனையும் வேலைவாய்ப்பாக அவர்கள் கருத வேண்டும்' என கருத்து தெரிவித்திருந்தார்.
அந்த நேரத்தில் அவரது கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு மாணவர்கள் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டிய பிரதமர் மோடி இவ்வாறு பொறுப்பின்றி பேசுவதா என பலத்த கண்டன கோஷங்கள் எழுப்பினர். நாடு முழுவதும் பலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வேலைவாய்ப்பு பிரச்சினை
இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், 'மோடி பக்கோடா' என்ற பிரசாரத்தை முன்னெடுத்தது பலரது கவனத்தையும் பெற்றதோடு சமூக வலைத்தளத்திலும் பேசு பொருளாக இருந்தது. இதற்கிடையே மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும், தனது பங்கிற்கு 'சாப்' எனப்படும் பஜ்ஜி விற்று ஒருவர் தனது வாழ்க்கை தரத்தை மாற்றியது தொடர்பாக பேசினார். மேலும் அவர் வேலைவாய்ப்பை அதிகரிக்க பஜ்ஜி தயாரிப்பதைக் கூட ஒரு தொழிலாக மாற்றலாம் என்று கூறினார். மோடியின் பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இவரது பேச்சும் எதிர்க்கட்சிகள் உள்பட இளைஞர்கள் மத்தியில் பலத்த கேலி, கிண்டலுக்கு ஆளானது.

ஆய்வு கட்டுரை
இந்த நிலையில், இவரது பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்காள பிரதமர் மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவர் ஆய்வு கட்டுரையை சமர்பித்துள்ளார். இதற்கு பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் தபாஸ் பால் உதவியதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வு கட்டுரை குறித்து தபாஸ் பால் கூறியதாவது:-

பஜ்ஜி, பக்கோடா
உணவுத் துறையில் பெரிய பெரிய, நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கிராமப்புறத்தில் உள்ள சகோதர சகோதரிகள் பஜ்ஜி மற்றும் பக்கோடா தயாரித்து விற்பதை ஏன் நாம் ஊக்கப்படுத்தக் கூடாது. மேற்கு வங்காள பிரதமர் மம்தா பானர்ஜி கூறிய கருத்தால், நான் பஜ்ஜி, பக்கோடா தொழில் குறித்து ஆய்வு நடத்தவில்லை. சமூகப் பிரச்சினைகளை மூலமாக வைத்தே இந்த ஆய்வினை மேற்கொண்டேன். கொடிய நோயான கொரோனா காலக்கட்டத்தில் கூட இந்த தொழில் செய்தவர்கள் அவ்வளவு பாதிக்கப்படவில்லை.

10 முதல் 12 மணி நேரம்
மற்ற தொழில்களை செய்தவர்கள் தான் இந்த காலக்கட்டத்தில் வறுமைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் பஜ்ஜி விற்றவர்கள் வாழ்க்கை இந்த காலக்கட்டத்தில் நன்றாக தான் இருந்தது. இந்த அமைப்புசாரா தொழில்கள் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளிக்கிறது. சாலையோரம் நடத்தப்படும் சிற்றுண்டி கடைகள் 74 சதவீதம் பெண்களாலே நடத்தப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்தவர்கள் தான். ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். எனவே பக்கோடா தொழிலை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் அரசுகள் உதவ வேண்டும். முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கை இது இல்லை. இறுதியாண்டு படிக்கும் மாணவி சமர்பித்த ஆய்வே இது. 'குடும்ப நலனில் ஊரக தொழிலின் தாக்கம்' என பெயரில் இந்த ஆய்வறிக்கை மாணவியால் மேற்கொள்ளப்பட்டது" இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications