சபரிமலையில் பரபரப்பு.. 18-ஆம் படியில் ஏற முயன்ற ஆந்திர பெண் தடுத்து நிறுத்தம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18-ஆம் படியில் ஏற முயன்ற ஆந்திர பெண்ணை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18ம் படி ஏற முயன்ற ஆந்திர பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது கொண்ட பெண்கள் நுழைவதற்கு அனுமதி காலம் காலமாக மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழிப்பாட்டு முறையில் ஆண், பெண் பேதம் பார்ப்பது குற்றம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட வயது பிரிவு பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ளார். கோயிலுக்குள் நுழைய முயன்ற அவரை பதினெட்டாம்படி அருகே கோயில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
அந்த பெண்ணிடம் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளனர். அடையாள அட்டையை சரிபார்த்தபோது அந்த பெண்ணுக்கு 31 வயதுதான் பூர்த்தியாகியுள்ளது என தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த காவலர்கள் கோயிலுக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்பினர். பக்தர்கள் பாதயாத்திரையைத் தொடங்கும் பம்பை நதி அருகே பெண்கள் நுழையாமல் தடுப்பதற்காக போலீஸ் பலத்த கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதையும் மீறி அந்த பெண் பதினெட்டாம்படி வரை எப்படி வந்தார் என்பது பற்றி கோயில் நிர்வாகத்தினர் விசாரித்து வருகின்றனர்.