67 எம்.எல்.ஏக்களுடன் ஆம் ஆத்மியை விட்டு வெளியேறுவேன்: கேஜ்ரிவால் மிரட்டலால் பரபரப்பு
டெல்லி: டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி குழப்பம் வலுத்து வருகிறது. இந்நிலையில் கட்சியின் 67 எம்.எல்.ஏக்களுடன் ஆம் ஆத்மியை விட்டே வெளியேறி விடுவேன் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் செல்போன் பேச்சு பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி. கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றது முதல் உள்கட்சி பூசல் தலைதூக்கியது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். கட்சியின் கொள்கைகளை மீறி கேஜ்ரிவால் சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினர்.
தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். யோகேந்திராவிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
அப்போது, கட்சிக்குள் நடக்கும் மோதல் தமக்கு மனவருத்தத்தை அளிப்பதாக கேஜ்ரிவால் தெரிவித்தார். உட்கட்சி பிரச்னையை சரிசெய்யும் வகையில் சிறப்பு குழு ஒன்றை கெஜ்ரிவால் அமைத்தார். ஆனாலும் கட்சி தலைவர்களுக்குள் ஏற்பட்டு வரும் மோதல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது.
இந்நிலையில் பிரசாந்த் பூஷண், யோகேந்திராவிடம் சமாதான பேச்சுவார்த்தையில் கட்சி தலைமை ஈடுபட்டது. இதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனிடையே ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூட உள்ளது. இந்த சூழ்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் செல்போன் பேசியதாக கூறப்படும் டேப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த உரையாடல்களில், பிரசாந்த் பூஷண், யோகேந்திராவை மிகக் கடுமையாக கேஜ்ரிவால் விமர்சிப்பதாக இடம்பெற்றுள்ளது. இதே நேரம் வேற கட்சிகளாக இருந்தால் இருவரையும் கட்சியை விட்டே தூக்கி எறிந்திருப்பார்கள் என்று கேஜ்ரிவால் கோபமாக கூறுவது அதில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இப்படியே நிலைமை நீடித்தால் 67 எம்.எல்.ஏக்களுடன் ஆம் ஆத்மியை விட்டு வெளியேறிவிடுவேன் என்றும் கேஜ்ரிவால் மிரட்டுவதாகவும் பதிவாகி உள்ளது. இருக்கின்ற பிரச்சனைகள் போதாது என்பதை போல இந்த புதிய டேப் வெளியாகி இருப்பது அக்கட்சியில் விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications