வங்கியில் பணம் இல்லாத கொடுமையால் இறந்துபோன முதியவர்.. இறுதிச் சடங்குக்கு கடன் கொடுத்த பேங்க் மேனேஜர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருந்து வாங்க பணம் இல்லாமல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குக்கு கூட பணம் இல்லாமல் போனதால் வங்கி மேலாளர் கடன் கொடுத்து
காசியாபாத்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் மருந்து வாங்க பணம் இல்லாமல் உயிரிழந்துள்ளார். இறுதிச்சடங்குக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட அவரது குடும்பத்துக்கு வங்கி மேலாளர் தனிப்பட்ட முறையில் கடன் கொடுத்து உதவியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத்தைச் சேர்ந்த முன்னேலால் ஷர்மா என்ற முதியவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் தீரவே கடந்த திங்கள் கிழமை காலை மருந்து வாங்க பணம் எடுப்பதற்காக தனது பேத்தி நேகாவுடன் நேவிக் மார்க்கெட் பகுதியில் தனக்கு கணக்கு உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு சென்றுள்ளார்.
அவர்களை பார்த்த வங்கி மேலாளர் வங்கியில் பணம் இல்லை என்றும் செவ்வாய்க்கிழமை வருமாறும் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்றுக் காலை முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இறுதிச்சடங்குகளை செய்வதற்கு கூட பணம் இல்லாமல் தவித்த அவர்களது குடும்பத்தினர் மீண்டும் வங்கிக்கு சென்றுள்ளனர். ஆனால் வங்கிக்கு நேற்று பணம் வரவில்லை. இதனால் செய்வறியாமல் தவித்த அவர்களுக்கு வங்கி மேலாளர் தனிப்பட்ட முறையில் 7000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்து உதவியுள்ளார்.
மேலும் அவரது வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசி கடனாக 10000 ரூபாய் அந்த முதியவரின் குடும்பத்துக்கு கடனாக கொடுத்து உதவும் படியும் கூறியுள்ளார். இதையடுத்து முன்னேலால் ஷர்மாவின் இறுதிச்சடங்கு பிற்பகலுக்குப் பின் நடந்து முடிந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.