ஒரே பொய்.. எல்லாத்துக்கும் ஆம்ஆத்மி தான் காரணம்.. குஜராத் தேர்தல் தோல்விக்கு பழிபோட்ட காங்கிரஸ்
காந்திநகர்: குஜராத் தேர்தல் தோல்விக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி தான் காரணம் எனவும், அந்த கட்சி செல்லும் இடங்களில் எல்லாம் பொய்களை கூறி வருவதாகவும் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான அசோக் கெலாட் பழிபோட்டுள்ளார்.
குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 8 ல் எண்ணப்பட்டன. குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது.
இன்று குஜராத் பறக்கிறார் ஓபிஎஸ்.. 3 தலைகளையும் சந்திக்க திட்டம்? 'ட்விஸ்ட்’! பரபரக்கும் அதிமுக!
பாஜக வெற்றி
இந்த தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் அக்கட்சியின் சாதனை பயணம் இந்த தேர்தலிலும் தொடர்ந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம்ஆத்மி கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
குஜராத் பொறுப்பாளர் அசோக் கெலாட்
இந்நிலையில் தான் குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இவர் தான் குஜராத் மாநில தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவு பற்றி அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அசோக் கெலாட் கூறியதாவது:
ஆம்ஆத்மி தான் காரணம்
குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியில் ஆம்ஆத்மி கட்சி மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. ஆம்ஆத்மி கட்சி செல்லும் இடங்களில் எல்லாம் பொய்களை கூறி வருகிறது. குஜராத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி போட்டியிட்டு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.
மோடியால் பாஜக வெற்றி
குஜராத்தில் பிரதமர் மோடி 3 மாதம் பிரசாரம் செய்தார். பல பொதுக்கூட்டங்களில் பேசினார். பேரணி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரமே குஜராத்தில் பாஜகவின் வெற்றிக்கு முழுகாரணமாகும். காங்கிரஸ் கட்சியின் பிரசார வியூகத்தில் குறைபாடு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பாஜக பெரிய ஊழல் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நிதியுதவி செய்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இதன்மூலம் பாஜக ஒருதலை பட்சமாக நிதியை பெற்று வருகிறது.
37 ஆண்டு சாதனை முறியடிப்பு
இந்த தேர்தலில் 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சி அதிக இடங்களில் பெற்ற வெற்றியாக இது பதிவாகி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 1985 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த 37 ஆண்டுகால சாதனையை தற்போது பாஜக முறியடித்து சரித்திரம் படைத்துள்ளது.
மோசமான நிலையில் காங்கிரஸ்
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த 2017 தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 60 இடங்களை தற்போதைய தேர்தலில் பறிகொடுத்து மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. குஜராத் தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சி பெறும் குறைந்தபட்ச வெற்றி இதுவாக பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 1990 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றதே குறைவானதாக இருந்த நிலையில் தற்போது அக்கட்சி மோசமான சாதனையை படைத்துள்ளது.