டெல்லியில் மின்தட்டுப்பாட்டை நீக்ககோரி மத்திய அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள்
டெல்லியில் வரலாறு காணாத வெயில் சுட்டெரித்து வருகிறது. டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியசாக இருந்தது. இந்நிலையில் மின்சார தட்டுப்பாடு தலைநகரில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க ஏசியோ, ஃபேனோ போட முடியாத நிலையில் டெல்லிவாலாக்கள் சிக்கி தவிக்கிறார்கள். இதை அரசியல் ஆயுதமாக கையிலெடுக்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. இன்று காலை திடீரென மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் வீட்டை டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் முற்றுகையிட்டனர்.
மூத்த எம்.எல்.ஏ மனிஷ் சிசோடியா தலைமையில், எம்.எல்.ஏக்கள் வந்திருந்தனர். எம்.எல்.ஏக்களும் தொண்டர்களும் இணைந்து கொண்டனர். பாஜகவுக்கு எதிராகவும், ஹர்ஷவர்த்தனுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்களை ஹர்ஷவர்த்தன் சந்திக்க விரும்பியதை தொடர்ந்து, அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது டெல்லி மின்சார தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனிஷ் சிசோடியா, ஹர்ஷவர்த்தனுக்கு மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமை உள்ளது என்பதை நினைவுபடுத்த வந்துள்ளோம். ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி நடத்தியபோது 24 மணி நேரமும் மின்சாரம் இருந்தது என்றார்.
இதன்பிறகு ஹர்ஷவர்த்தன் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சி 49 நாட்களில் டெல்லி அரசை கவிழ்த்து ஓடியது ஏன்? அவ்வாறு ஓடாமல், மின்சார உற்பத்தியை பெருக்கி நிலைமையை சரி செய்திருக்க வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பினார். இச்சம்பவத்தால் காலையிலேயே ஹர்ஷவர்த்தன் வீடு அமைந்திருந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளில் ஒன்றிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறவில்லை. அனைத்திலும் பாஜக வெற்றி பெற்றது. இழந்த செல்வாக்கை மீட்க ஆம் ஆத்மி இதுபோல டெல்லி பாஜகவின் முக்கிய பிரமுகரான ஹர்ஷவர்த்தனை குறி வைத்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.