ஆபிஸில் இருப்பதை விட தெருவிலேயே திரிகிறார்கள் ஆம் ஆத்மியினர்... பாஜக கிண்டல்
டெல்லி: தலைமச் செயலகத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை விட தெருவில் இருப்பதையே ஆம் ஆத்மி அமைச்சர்களும், அந்தக் கட்சியின் முதல்வரும் விரும்புவது போலத் தெரிகிறது என்று பாஜக கிண்டலடித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி ஒரு அறிக்கையில் கூறுகையில், ஆம் ஆத்மியினருக்கு தலைமைச் செயலகத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை விட தெருவில் இருப்பதே ரொம்பப் பிடித்துள்ளதாக தெரிகிறது.
கெஜ்ரிவால் அறிவித்துள்ள தர்ணா போராட்டம் தேவையற்றது. அரசை தெருவுக்கு இழுத்து வரும் எண்ணத்தில் அவர் இருக்கிறாரா என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது. இந்தப் போராட்டம் எதற்காக... காங்கிரஸுக்கு தர்மசங்கடத்தைக் கொடுக்கவா அல்லது அரசை தெருவில் வைத்து நடத்தவா... அல்லது தங்களது கோரிக்கைகளுக்கு உள்துறை அமைச்சரைப் பணிய வைக்கவா...
ஆம் ஆத்மி அமைச்சர் சோம்நாத் பார்தி, டெல்லியில் தங்கியுள்ள ஆப்பிரிக்கர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளார். அவரது பேச்சுக்கள் இனவெறியுடன் கூடியவை. அதைக் கண்டிக்காமல், அவருக்கு ஒத்துழைப்பு தராத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோருகிறார் கெஜ்ரிவால். இது நியாயமா...
கும்பல்கள் கூடி முடிவுகளை எடுக்க முடியாது. அது சாத்தியப்படாது. முறையான நிர்வாகமே திறமையான அரசுக்கு அழகு. மக்கள் சேவகர்களாக இருப்பது எப்படி முக்கியமோ, அதேபோல மக்களுக்கான அரசை திறம்பட நடத்துவதும் முக்கியம் என்று கூறியுள்ளார் ஜேட்லி.