டெல்லி சட்டசபை தேர்தல்: மோடி படத்துடன் ஓட்டுக் கேட்ட ஆம் ஆத்மி
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி படத்தைப் போட்டு வாக்கு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
டெல்லியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் ஆம் ஆத்மி கட்சி தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் "பிரதமர் பதவிக்கு மோடி; டெல்லி முதல்வர் பதவிக்கு அரவிந்த் கேஜ்ரிவால்" என்ற கோஷத்தை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டது.
மேலும் டெல்லிவாசிகள் மத்தியில் வலிமையான பிரதமராக மோடிஜியை தேர்ந்தெடுத்தனர். அதேபோல் டெல்லியில் ஊழலற்ற, அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கூடிய வலிமையான முதல்வர் பதவிக்கு அரவிந்த் கேஜ்ரிவாலையே விரும்புகின்றனர்" என்ற வாசகங்களுடன் கூடிய வீடியோவை வெளியிட்டிருந்தது.
பிரதமர் மோடி படத்தைப் போட்டு ஆம் ஆத்மி இப்படி பிரசாரம் செய்தது குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அந்த பிரசார வீடியோவை முழுவதுமாக ஆம் ஆத்மி கட்சி நீக்கிவிட்டது.
Most of d thngs in .@AamAadmiParty r voluntr driven. Web is also one whr a voluntr creatd & postd tht non-approvd img by mistake. Pl ignore!
— Dilip K. Pandey (@dilipkpandey) November 7, 2014
இது குறித்து ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்ட ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் திலீப் பாண்டே, இந்த விளம்பரம் தவறுதலாக வெளியிடப்பட்டுவிட்டது. தயவு செய்து இதை தவிர்த்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டவர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.