என்னது.. எபோலோ இந்தியாவிற்குள் வந்து விட்டதா? வாட்ஸ்-அப்பில் தீயாய் பரவும் மெசேஜ்
பெங்களூர்: இந்தியாவிற்குள் அதிலும் குறிப்பாக கர்நாடகாவின் மங்களூர் பகுதிக்கு எபலோ நோய் பரவிவிட்டதாக வாட்ஸ்-அப் மூலமாக வேகமாக பரப்பப்பட்டுவரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று இம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் யூ.டி.காதர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் முன்னெச்சரிக்கை
ஆட்கொல்லி நோயான எபலோ ஆப்பிரிக்க நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிற்குள் நோயாளிகள் யாரும் நுழையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
மங்களூரில் மாணவர் சாவு?
இந்நிலையில் வாட்ஸ்-அப் பயனாளிகள் பலருக்கும் சில நாட்களாக எபலோ குறித்த மெசேஜ் வருகிறது. அந்த தகவலில், மங்களூர் அருகேயுள்ள சூரத்கல் நகரில் எபலோ பரவி ஒரு மாணவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்தனர்.
கடும் நடவடிக்கை
இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் யூ.டி.காதர் அளித்த பேட்டியொன்றில் இத்தகவலை மறுத்துள்ளார். மேலும், இந்த தகவலை பரப்பியது யார் என்பதை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எபலோவுக்கு 1200 உயிர்
மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் எபோலோ நோய்க்கு இதுவரை அங்கு 1200 பேர் உயிரை பறிகொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.